சின்னவரே.. மக்கள் காத்திருக்காங்க.. வாங்க.. போட்டி போட்டு புகழ்ந்த எம்எல்ஏ, எம்.பி- நெளிந்த உதயநிதி!
வேலூர் : வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினை, திமுக எம்.எல்.ஏ நந்தகுமார், எம்.பி கதிர் ஆனந்த் ஆகியோர் பயங்கரமாக புகழ்ந்து பேசினர்.
Recommended Video
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என திமுக அமைச்சர்கள் பலர் குரல் எழுப்பிய நிலையில், கொஞ்ச காலம் போகட்டும் என பெண்டிங்கில் வைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவைக்கு வரும் காலம் விரைவில் வரப்போகிறது என திமுக நிர்வாகிகள் நிகழ்ச்சிகளில் பேசி வருகின்றனர்.
அந்த 6 பேர்.. அதில் 1 இப்பவே காலி.. பதவி பறிப்பு எப்போது? ரெண்டு விரலை காட்டும் எடப்பாடி பழனிசாமி!
திமுக நிகழ்ச்சி
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதி தி.மு.க சார்பில் 200 மூத்த தி.மு.க முன்னோடிகளுக்கு பொற்கிழி, ஏழை பெண்களுக்கு தையல் எந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் சலவைத் தொழிலாளிகளுக்கு சலவை பெட் டிகள், நாவிதர்கள் 100 பேருக்கு சலூன் கிட், ஆட்டோ டிரைவர்கள் 22 பேருக்கு ஆட்டோக்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.
வேலூரில் உதயநிதி
இந்த விழாவில் தி.மு.க இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, வேலூர் மாவட்ட தி.மு.க செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ, வேலூர் எம்.பி கதிர் ஆனந்த், மாநகராட்சி மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கதிர் ஆனந்த் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் பேசிய வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க எம்.பி கதிர் ஆனந்த் உதயநிதிக்கு அரியணை காத்துக் கொண்டிருக்கிறது என்றார். கதிர் ஆனந்த் பேசுகையில், "உதயநிதிக்கும் எனக்கும் சின்ன பொருத்தம். அவர் முதன்முதலாக கன்னிப் பேச்சாக தனது தேர்தல் பரப்புரையை தொடங்கியது வேலூர் மாவட்டத்தில்தான். நாடாளுமன்றத் தேர்தலில் ஊரெல்லாம் போய் பிரசாரம் செய்தார். 39-க்கு, 38 தொகுதிகளை வென்று கொண்டு வந்தார். சட்டமன்றத் தேர்தலிலும் களமிறங்கினார்.
அரியணை காத்திருக்கிறது
ஒரே ஒரு செங்கல்லை கையில் எடுத்துக்கொண்டு, இந்தியாவே திரும்பிப் பார்க்கக்கூடிய பிரசாரத்தை மேற்கொண்டு, திமுகவுக்கு பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தார். போர்க்குணத்துடன் போராடக் கூடியவர் உதயநிதி. உங்களுக்காக அரியணை காத்து கொண்டிருக்கிறது. அவகாசம் எடுத்து கொள்ளுங்கள். நீங்கள் பட்டம் சூடக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை. மக்கள் காத்து கொண்டிருக்கிறார்கள்" எனப் பேசினார்.
நந்தகுமார்
அதேபோல வேலூர் மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ பேசுகையில், "சின்னவர் உதயநிதி, இந்த இயக்கத்தின் ஹீரோ. சின்னவர் பிறக்கும்போதே முதலமைச்சரின் பேரனாகப் பிறந்தவர். இப்போது, அவரின் தந்தை முதலமைச்சர். அவர் தான் இன்னும் 50 ஆண்டுகாலம், இந்த நாட்டை ஆளப்போகிறார். சின்னவர் நம்முடைய எதிர்காலம். சேப்பாக்கம் சட்டமன்றத் தொகுதியின் நிரந்தர சட்டமன்ற உறுப்பினரும் அவர்தான்.
நான் சொல்றேன்
எவன் எவனோ ஜோசியம் சொல்றான். நான் ஆன்மீகத்தை நம்பக்கூடியவன். ஆனால், ஜோசியத்தை நம்ப மாட்டேன். ‘தளபதிக்கு கட்டம் சரியில்லை. ஜாதகம் சரியில்லை. அவர் அதற்கு சரிப்பட்டு வர மாட்டார்' என்று சொன்னார்கள். இன்றைக்கு சிறப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் நம் தலைவர். ‘சின்னவர் அமைச்சரவைக்கு வந்தால், பிரளயம் ஏற்படும்' என்று ஒரு அரசியல் கட்சித் தலைவர் சொல்கிறார். இது திமுக. யார் வந்தாலும் தி.மு.கவை அசைக்க முடியாது. சின்னவர் கண்டிப்பாக மகுடம் சூடுவார்" எனப் பேசினார்.
போட்டி போட்டு
திமுக எம்.எல்.ஏ நந்தகுமாரும், திமுக எம்.பி கதிர் ஆனந்தும், உதயநிதி அமைச்சராக விரைவில் வருவார் என்று கூறி அவரைப் புகழ்ந்து தள்ளினர். உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றியபோதே, தலைமைக்கு தர்ம சங்கடம் கொடுக்க வேண்டாம் என்றவர் உதயநிதி. அவரை மேடையில் வைத்துக்கொண்டே அமைச்சர் பதவி குறித்து திமுக நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்ததால், உதயநிதி ஸ்டாலின் கூச்சத்தில் முகமெல்லாம் புன்னகையோடு நெளிந்தார்.