வேலூரில் மீண்டும் கதிர் ஆனந்த்.. அதே ஏசிஎஸ்.. பாஜக ரொம்ப டஃப் கொடுப்பாங்க.. எச்சரிக்கும் முதல்வர்
வேலூர்: லோக்சபா தேர்தல் களம் அனலடிக்கிறது. வெயில் நகரமான வேலூரில் சிட்டிங் எம்.பி கதிர் ஆனந்தையே மீண்டும் களமிறக்குகிறது திமுக. அவரை எதிர்த்து பாஜக வேட்பாளராக ஏசி சண்முகம் போட்டியிட உள்ளார். தொகுதியை தக்க வைக்க கதிர் ஆனந்த் பல கட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் இம்முறை விடக்கூடாது என்று நலத்திட்ட பணிகளை விடாது செய்து வருகிறாராம் ஏசி சண்முகம். கதிர் ஆனந்த் மீண்டும் களத்துக்கு வருவதை உறுதிப்படுத்தும் விதமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் தந்தை துரைமுருகன் முன்னிலையில் நடந்த நேர்காணலில் பங்கேற்ற போது பல்வேறு சுவாரஸ்யங்கள் அரங்கேறியுள்ளன.
கடந்த 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு தனியாக தேர்தல் நடந்தது என்றால் அது வேலூர் தொகுதி தான். அப்போதைய வேட்பாளர்களில் திமுகவில் இருந்து அமைச்சர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அதிமுக கூட்டணியில் ஏசி சண்முகம் போட்டியிட்டார். 8141 வாக்கு வித்தியாசத்தில் திமுகவின் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

5 ஆண்டுகள் வேலூரில் மக்கள் பணியாற்றியுள்ளார் கதிர் ஆனந்த். லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்படாவிட்டாலும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி விட்டன. வேலூரில் பாஜக கூட்டணியில் இருந்து ஏசி சண்முகம் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
அதே போல திமுகவில் இருந்து கதிர் ஆனந்த் மீண்டும் போட்டியிட உள்ளார். இப்போதே அது தொடர்பான பணிகள் தொடங்கி விட்டன. வேலூர் தொகுதியில் இப்போதே பரபரப்பு தொடங்கி விட்டது.
கடந்த வாரம் திமுக தலைமையகமான அறிவாலயத்தில் அப்பாவின் முன்னிலையில் வேலூரில் போட்டியிட விருப்ப மனு அளித்தார் கதிர் ஆனந்த். இந்தியா கூட்டணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்தமுறை அதிகார துஷ்பிரயோகம் இருந்ததால் தேர்தலின் போது குழப்பம் ஏற்பட்டதாகவும், இருந்தாலும் திமுக வெற்றி பெற்றதைப் போல, இந்தமுறையும் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றும் நம்பிக்கையோடு கூறியுள்ளார் கதிர் ஆனந்த்.
10ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேட்பாளர் நேர்காணலும் நடைபெற்றது. நேர்காணல் நடந்த போது நின்று கொண்டே பதில் அளித்தார் கதிர் ஆனந்த். விருப்ப மனு கொடுத்த பலரும் நேர்காணலின் போது அமர்ந்து பதில் சொன்ன நேரத்தில் கதிர் ஆனந்த் மட்டும் நின்று கொண்டே பதில் அளித்தார். அதனை தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார் கதிர் ஆனந்த்.
நேர்காணலில் துரைமுருகன், திமுக தலைவரும் முதல்வருமான மு.க ஸ்டாலின்,டி.ஆர் பாலு ஆகியோரிடம் ஆசியும் பெற்றுள்ளார். வேலூர் தொகுதியில் போட்டியிட கதிர் ஆனந்த் மட்டுமல்லாது மற்றொருவரும் விருப்ப மனு கொடுத்துள்ளார். திமுக அவைத்தலைவர் முன்னாள் எம் பி யாக இருந்த மொஹம்மத் சாஹு என்பவரும் மனு கொடுத்துள்ளாராம். முதல்வரை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காக தான் வேட்பாளர் நேர்காணலுக்கு வந்து இருந்தேன். மற்றபடி போட்டியிடும் எண்ணமில்லை என்று அங்கேயே எல்லோர் முன்னாலும் கூறினாராம் விருப்பமனு கொடுத்த முன்னாள் எம்.பி.
நேர்காணலின் போது மற்றொரு சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியது. நேர்காணல் நடைபெற்ற அறைக்கு கதிர் ஆனந்த் சென்ற போது வாங்க முதல் வெற்றி வேட்பாளர்.. என்று பலரும் அழைக்கவே துரைமுருகன் முகத்தில் சிரிப்பும் பூரிப்பும் ஏற்பட்டுள்ளது. வேலூர் தேர்தல் வேலை எல்லாம் எப்படி போகுது பரவாயில்லயா என்று கேட்ட முதல்வர் ஸ்டாலின், பாஜக ரொம்ப டஃப் கொடுப்பாங்க எப்படியும் ஜெயிக்கணும் என்று கதிர் ஆனந்திடம் சொல்லி அனுப்பியிருக்கிறாராம் முதல்வர் ஸ்டாலின்.
நேர்காணல் முடிந்த கையோடு தந்தை துரைமுருகன் ஆசி இருக்கிற தன்னம்பிக்கையோடு, வேலூர் நாடாளுமன்றத் தொகுதி முழுவதும் கதிர் ஆனந்த் வலம் வரத் தொடங்கிவிட்டார். கட்சியினரும் தேர்தல் பணிகளில் ஈடுபடத் தயாராகிவிட்டனர்.

அதே நேரத்தில் வேலூரில் போட்டியிடும் பாஜக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம், இம்முறை விடக்கூடாது என்று களப்பணியாற்றுகிறார். சென்ற முறை தான் கோட்டை விட்டுவிட்டோம். இந்த முறை விடவே கூடாது என ஆங்காங்கே மெடிக்கல் கேம்ப் நடத்தி வருகிறார்.
அதே போல கதிர் ஆனந்தும் தனது 5 வருட எம்.பி கால கட்டத்தில் சத்துவாச்சாரி சுரங்க பாதை கொண்டு வந்தது முதல் கேவி குப்பம் பகுதியில் நிறுவப்பட்டுள்ள டோல் கேட்டை செயல்பாட்டுக்கு வர விடாமல் தடுத்தது வரை லிஸ்ட் போட்டு சொல்லி மக்களிடம் தான் செய்த சாதனைகளை எடுத்து சொல்ல ஆரம்பித்துவிட்டார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. வேட்பாளர் லிஸ்ட் வெளியாகவில்லை என்றாலும் எப்படியும் ஜெயித்தே ஆக வேண்டும் என்று மும்முரமாக களமிறங்கி உள்ளதாம் திமுக தரப்பு. வேலூரில் வெயில் ஒரு பக்கம் சுட்டெரிக்க தேர்தல் பணிகளால் மற்றொரு பக்கம் அரசியல் களம் அனலடிக்க ஆரம்பித்து விட்டது.












Click it and Unblock the Notifications