வேலூர் இப்ராஹிமுக்கு வந்த சோதனை.. உள்ளூரிலேயே விரட்டிய முஸ்லிம்கள்! போலீசாரின் தடையை மீறியதால் கைது
வேலூர்: மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கி துண்டு பிரசுரம் விநியோகிக்க சென்ற வேலூர் இப்ராஹிமை உள்ளே அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்று கூட முழக்கமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 2014 ஆம் ஆண்டு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைத்தது. அதை தொடர்ந்து 2019 மக்களவைத் தேர்தலிலும் பாஜக வெற்றிபெற்று 2 வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றார். இந்த நிலையில் கடந்த மே மாதத்தோடு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்தது.

அடுத்த ஆண்டு மே மாதத்துடன் பாஜகவின் ஆட்சி நிறைவடைந்து மக்களவைத் தேர்தல் நடத்தப்பட இருக்கும் நிலையில், மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் நாடு முழுவதும் பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள், சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள், சமூக வலைதள பிரச்சாரங்கள், துண்டு பிரசுரங்கள் என பல்வேறு வகைகளில் பாஜக இப்போதே பிரச்சார பணிகளை தொடங்கி இருக்கிறது.
அந்த வகையில் தமிழ்நாடு பாஜக சார்பிலும் மோடி அரசின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள், பல்வேறு ஊர்களில் நடைபெற்றன. இந்த நிலையில் பாஜக சிறுபான்மை அணியின் தேசிய செயலாளரான வேலூர் இப்ராஹிம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனையை விளக்கி துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்.
கடை வீதிகளிலும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கியும், பொதுமக்களிடமும் அவர் துண்டு பிரசுரங்களை விநியோகித்து பாஜகவுக்கு ஆதரவு திரட்டினார். இந்த நிலையில் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் சித்தூர் கேட் மற்றும் தரணம்பேட்டை ஆகிய பகுதிகளில் வேலூர் இப்ராஹிம் துண்டு பிரசுரம் விநியோகிக்க சென்றபோது போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனால் போலீசாருக்கும் வேலூர் இப்ராஹிமுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசாரை கண்டித்து வேலூர் இப்ராஹிம் தலைமையில் பாஜகவினரும் போலீசாரை கண்டித்து அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மற்ற பகுதிகளில் வேலூர் இப்ராஹிம் தலைமையிலான பாஜகவினர் துண்டு பிரசுரங்களை விநியோகிக்க சென்றனர்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் வேலூர் இப்ராஹிம் மற்றும் பாஜகவினர் தங்கள் பகுதிக்குள் வருவதை அறிந்து அவர்களுக்கு எதிராக கண்ட முழக்கங்களை எழுப்பினர். தமுமுக, மஜக உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரும் அங்கு ஒன்று வேலூர் இப்ராஹிம் தங்கள் பகுதிக்குள் நுழையக் கூடாது எனக்கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
அவர்கள் பாஜகவினரை நோக்கி நகர்ந்தபோது போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அடுத்து தங்களின் அறிவுறுத்தலை மீறி துண்டு பிரசுரம் விநியோகிக்க சென்றதற்காக வேலூர் இப்ராஹிம் மற்றும் பாஜகவினரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications