வேலூர் தேர்தல்: நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டி.. சீமான்
Recommended Video
சென்னை: வேலூர் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இதன்படி தீபலட்சுமி போட்யிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 18ம் தேதி தமிழகம் முழுவதும் லோக்சபா தேர்தல் நடந்தது. ஆனால் வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகார்கள் காரணமாக தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இந்நிலையில் வரும் ஆகஸ்டு மாதம் 5ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதில் கடந்த முறை திமுக தரப்பில் போட்டியிடுவதாக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் தான் இந்த முறை போட்டியிடுகிறார். இதேபோல் அதிமுக கூட்டணி சார்பாக புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் வேலூர் லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்ட அறிக்கையில், "நடக்கவிருக்கிற வேலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அன்புத்தங்கை தீபலட்சுமி போட்டியிடுவார்.
கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனவும், மாநிலம் முழுவதும் உள்ள உறவுகள் அனைவரும் இக்களத்தில் பங்கேற்று தங்களது அளப்பெரிய பங்களிப்பைச் செலுத்தி வெற்றிக்கு உழைக்க வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.