வேலூர் கவுசிக்கிற்கு எமனாக எதிரே வந்த டிராக்டர்.. பிளஸ் 2 தேர்வில் நல்ல மார்க்.. உருகும் நண்பர்கள்
வேலூர்: வேலுர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த கவுசிக்கிற்கு 18 வயது ஆகிறது. குடியாத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார். இவர் கடந்த மாதம் 24-ந் தேதி காலை கவுசிக் மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த டிராக்டர் எமனாக மாறியது. மாணவன் கவுசிக் பிளஸ் 2 தேர்வில் எடுத்த மதிப்பெண் பற்றி பார்ப்போம்.
பிளஸ்-2 வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடந்தது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 3 லட்சத்து 73 ஆயிரத்து 178 மாணவர்கள், 4 லட்சத்து 19 ஆயிரத்து 316 மாணவிகள் என மொத்தம் 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர் எழுதி இருந்தார்கள். இவர்களைத் தவிர தனித்தேர்வர்களாக 16 ஆயிரத்து 904 பேரும், சிறைவாசிகளாக 140 பேரும் எழுதியிருந்தார்கள்.

தேர்வை எழுதியவர்களுக்கான தேர்வு முடிவு கடந்த மே 8ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு எழுதிய 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேரில், 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 மாணவர்கள், 4 லட்சத்து 5 ஆயிரத்து 472 மாணவிகள் என மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். தேர்ச்சி சதவீதம் 95.03 ஆகும். வழக்கம்போல, இந்த ஆண்டு மாணவர்களைவிட 3.54 சதவீதம் மாணவிகளே அதிகம் தேர்ச்சி அடைந்திருக்கிகறார்கள்.
தேர்ச்சி சதவீதத்தை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிகம் ஆகும். கடந்த ஆண்டு 94.56 சதவீதமாக இருந்த தேர்ச்சி சதவீதம், இந்த ஆண்டு 95.03 சதவீதமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 7 ஆயிரத்து 513 அரசு, அரசு உதவி பெறும், தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து பிளஸ்-2 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர். இதில் 2 ஆயிரத்து 638 பள்ளிகள் 100 சதவீதம் வெற்றி பெற்றன.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவில், தேர்ச்சி சதவீதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு 4-வது இடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு முதலிடத்தை பிடித்திருக்கிறது. அரியலூரை தொடர்ந்து ஈரோடு 2-வது இடத்திலும், திருப்பூர் 3-வது இடத்திலும் உள்ளது. வழக்கம் போல் கடைசி இடத்தில் வேலூர் இருக்கிறது. வேலூர் மாவட்டம் 90 சதவீதம் என்கிற அளவில் எடுத்துள்ளது.
இந்நிலையில் வேலுர் மாவட்டம் குடியாத்தம் டவுன் பிச்சனூர் சுங்கு சீதாராமன் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். பிரிட்ஜ், ஏ.சி. மெக்கானிக். இவரது மனைவி கெஜலட்சுமி. இவர்களின் மகன் கவுசிக்கிற்கு 18 வயது ஆகிறது. குடியாத்தத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 தேர்வு எழுதி இருந்தார். கடந்த மாதம் 24-ந் தேதி காலை கவுசிக் மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
குடியாத்தம் பலமநேர் சாலையில் பிச்சனூர் அழகு பெருமாள் கோவில் அருகே டிராக்டர் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகியது. இதில் கவுசிக் 420 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோரும், உறவினர்களும் சக மாணவர்களும் கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.












Click it and Unblock the Notifications