வேலூர் டாஸ்மாக்கில் திருடனுக்கு விசேஷ கவனிப்பு..'போலீசிடமே'.. மது வாங்க போனதை மறக்கவே மாட்டார்
வேலூர்: ஜார்க்கண்ட் மாநிலம் ஜாரியா பகுதியை சேர்ந்த பிரதான் என்பவர் அம்மாநிலத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தனது தாயாரை வேலூரில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார். வேலூரில் தங்கி சிகிச்சை பெறும் தாயாரை கவனித்து வருகிறார். இவரிடம் ஐந்தாயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிய திருடனுக்கு டாஸ்மாக்கில் மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது.
பொதுவாக அசந்த நேரத்தில் திருடர்கள் திருடுவது வழக்கம். அதே திருடர்கள் அசந்தநேரத்தில் போலீசிடம் சிக்கி கொள்வார்கள். அது அவ்வப்போது நடக்கும்.அதுவும் திருடர்கள் போலீசிடம் சிக்க போகிறோம் என்பது தெரியாமலேயே சிக்கி கொள்வார்கள். அந்த வகையில் தான் வேலூரில் ஒரு திருடன் போலீசிடம் கை வைத்து போலீசிடம் சிக்கி உள்ளார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாரியா பகுதியை சேர்ந்த 48 வயதாகும் பிரதான் என்பவர் அங்குள்ள மாநில அரசின் ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். பிரதானின் தாயார் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து தனது தாயாருக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தவர், தமிழ்நாட்டின் வேலூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூருக்கு அழைத்து வந்திருக்கிறார் அவரை பரிசோதித்த டாக்டர்கள் சில நாட்கள் தங்கி தொடர் சிகிச்சை பெற வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.
அதனால் பிரதான் காகிதப்பட்டறையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்து அவ்வப்போது தாயாரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை காவலர் பிரதான் காகிதப்பட்டறையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு இளைஞர், திடீரென அவரின் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரதான் இதுகுறித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சத்யவாணி வழக்குப்பதிந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது நம்ம காட்டுப்பூச்சி என்பது போல், திருடன் யார் என்பதை பார்த்த உடனே போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். போலீசார் சத்துவாச்சாரியை சேர்ந்த ராஜேஷ் என்ற மணி (25) என்பவர் பிரதானிடம் இருந்து பணத்தை பறித்தது என்பதை கண்டனர். இதையடுத்து மணியை போலீசார் தீவிரமாக தேடினர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 12.30 மணியளவில் காகிதப்பட்டறையில் உள்ள டாஸ்மாக் கடையின் அருகே மது வாங்குவதற்காக ராஜேஷ் நின்று கொண்டிருப்பது போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை டாஸ்மாக்கிலேயே வைத்து மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.5 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். கைதான ராஜேஷ் என்கிற மணி மீது கொலை வழக்கு உள்பட 5-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் போலீஸ் நிலையங்களில் உள்ளதாக போலீசார் கூறினார்கள். தொடர்ந்து மணியிடம் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications