புழல் சிறை வார்டன் உட்பட 3 பேர் ஒரே இரவில் வெட்டிக் கொலை.. திக் திக் வேலூர்!
வேலூர்: நண்பனை கொன்றதால் ரவுடி கும்பலை கொல்ல திட்ட தீட்டிய புழல் சிறை வார்டன் உள்பட 3 பேரை, அந்த ரவுடி கும்பல் ஒரே இரவில் அடுத்தடுத்து வெட்டி கொலை செய்த சம்பவம் வேலூர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
வேலூர் தோட்டப்பாளையத்தை சேர்ந்தவர் அசோக்(26). இவர் கடந்த ஏப்ரல் மாதம் அரியூரில் கள்ளச்சாராயம் குடிக்கச்சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, இவருக்கும் பிரபல ரவுடியான எம்எல்ஏ ராஜா கும்பலை சேர்ந்த 7 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து அசோக்கை ரவுடி எம்எல்ஏ ராஜா மற்றும் அவரது கும்பலைச் சேர்ந்தவர்கள் அப்போது கத்தியில் வெட்டியும், கல்லை தூக்கி போட்டு தலையை நசுக்கியும் கொலை செய்தனர். இதனிடையே அசோக்கின் நெருங்கிய நண்பர் அரியூரை சேர்ந்த காமேஸ் என்பவர் ஆவார். காமேஸின் நண்பர் திவாகர் (CMC ஊழியர்) மற்றும் வேல்(எ) தனிகைவேல் மூவரும் நண்பர்கள் ஆவர்.
திட்டம் தீட்டினர்
இதில் தனிகைவேல் சென்னை புழல் சிறையில் ஜெயில் வார்டனாக பணிபுரிகிறார் இந்நிலையில் காமேஸ் மற்றும் அவரது நண்பர்கள் மூவரும், நண்பர் அசோக்கின் கொலைக்கு காரணமானவர்களை பழிக்குபழி வாங்க வேண்டும் என்று திட்டம் தீட்டி கொண்டு இருந்து உள்ளனர்.
3 பேரையும் கொல்ல முடிவு
இதனிடையே அசோக் கொலை வழக்கில் தொடர்புடைய ரவுடி எம்எல்ஏ ராஜா கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தன்னை கொலை செய்ய காமேஷ் திட்டம் தீட்டியது ராஜாவுக்கு தெரியவந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, உயிருடன் விட்டால் நம்மை கொன்றுவிடுவார்கள் என்று நினைத்த ரவுடி எம்எல்ஏ ராஜா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து காமேஷ், திவாகர், தணிகைவேலு ஆகிய 3 பேரையும் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார்.
விரைந்த ரவுடிகள்
நேற்று முன்தினம் இரவு அணைக்கட்டு அடுத்த புலிமேடு பகுதியில் தணிகைவேலு, திவாகர் ஆகியோர் மது அருந்திக் கொண்டிருப்பதாக ராஜாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையறிந்த ராஜா தனது கூட்டளிகளான உமாமகேஸ்வரன், லோகேஷ், ஆனந்த், ரோகித்குமார், சுனில், சேம்பர் ராஜா ஆகியோருடன் அங்கு விரைந்து சென்றார்.
2 பேர் வெட்டிக் கொலை
அப்போது குடிபோதையில் இருந்த சிறை வார்டன் தணிகைவேலு, திவாகர் ஆகியோரை திடீரென சுற்றிவளைத்து கழுத்தில் துண்டை சுற்றி சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் அங்கிருந்து தப்ப முயன்றனர். இருப்பினும் இருவரையும் கழுத்து, தோள்பட்டை ஆகிய இடங்களில் கொடூரமான முறையில் வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் அவர்கள் 2 பேரும் அதே இடத்தில் உயிரிழந்தனர்.
ஸ்கெட்ச் போட்டு கொலை
இதையடுத்து ரவுடி எம்எல்ஏ ராஜா கும்பல் உள்பட 7 பேரும் புலிமேட்டில் இருந்து அரியூர் வந்தனர். அரியூர் அடுத்த ராஜாபாளையம் பகுதியில் அசோக்கின் மற்றொரு நண்பரான காமேஷ் நின்றுக் கொண்டிருந்ததை பார்த்த எம்எல்ஏ ராஜா கும்பல் அவரையும் சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து காமேஷ் தப்பியோட முயன்றார். ஆனால் விடாமல் அவரை ஓட, ஓட விரட்டி வெட்டி கொன்றனர்.
உடல்கள் மீட்பு
அப்போது வழியில் இதுகுறித்து தகவலறிந்த டிஐஜி காமினி, எஸ்பி செல்வகுமார் மற்றும் ஏஎஸ்பி ஆல்பர்ட்ஜான், இன்ஸ்பெக்டர் சுபா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து, 3 சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
7 பேரும் கைது
பின்பு குடிபோதையில் கொலை நடந்த பகுதியில் இருந்து காயம் வழியாக நேற்று அதிகாலை காரில் தப்ப முயன்ற 7 பேர் கொண்ட கொலை கும்பலை போலீசார் கைது செய்தனர். தனி இடத்தில் வைத்து விசாரனை நடத்தி வருகின்றனர் . ஒரே இரவில் ஜெயில் வார்டன் உட்பட 3 பேர் அடுத்து அடுத்து நடந்த கொலை சம்பவத்தால் வேலூர் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.