வேலூரில் கண்ணாடி விரியன் பாம்பிடம் போதையில் அரை மணி நேரமாக பேச்சுவார்த்தை.. காண்டாகி செய்த காரியம்
வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். அவர் அந்த பகுதியில் பாம்புகளை பிடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த தேவராஜ், அந்த சாலையில் ஊர்ந்து சென்ற கண்ணாடி விரியன் பாம்பை பிடித்துள்ளார். போதையில் இருந்த அவர், வித்தை காட்டுவதுபோல் பேசிக்கொண்டிருந்தவரை கண்டாகி கண்ணாடி விரியன் காலி செய்தது.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
பொதுவாக பாம்புகளில் நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டை, கட்டு விரியன் போன்ற பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டவை.

இந்த பாம்புகளில் ஏதாவது ஒன்று கடித்து தான் தமிழ்நாட்டில் பலர் உயிரிழக்கிறார்கள். இதில் எந்த வகை விரியன் பாம்புகள் கடித்தாலும் இரத்தம் உறைதல் ஏற்பட்டு இறந்துவிடுவார்கள். நாகப்பாம்பு மற்றும் விரியன் பாம்புகள் கடித்தால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற்றால் மட்டுமே தப்பிக்க ஓரளவு வாய்ப்பு இருக்கும். அதேபோல் இந்த பாம்புகள் கடித்தால் உடனே உயிருக்கே மிகவும் ஆபத்தான நிலை ஏற்படும். எனவே பாம்புகளை அதன் போக்கில் விட்டுவிடுவது நல்லது. தேவையற்ற வகையில் சீண்டுவது, தெரியாமல் மிதிப்பது போன்றவை தான் பாம்புகள் கோபப்பட்டு கடிக்க காரணமாக உள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த 41 வயதாகும் தேவராஜ் என்பவருக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. தேவராஜ் அந்த பகுதியில் கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று வந்தார். இவர் பொதுமக்கள் அளிக்கும் தகவல்களின் பேரில் சிறு சிறு பாம்புகளை பிடித்தும் வந்துள்ளார். இதனால் இவரை பாம்பு தேவராஜ் என்று குடியாத்தம் பகுதி மக்கள் அழைப்பார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மது போதையில் இருந்த தேவராஜ், குடியாத்தம் சந்தப்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். போதை அதிகமானதால் தள்ளாடியபடி அவர் சென்றுள்ளார் அப்போது அங்கு பெரிய அளவிலான கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று சாலை ஓரம் ஊர்ந்து சென்று கொண்டிருந்தது.
இதனிடையே பாம்புகளை பிடிப்பதில் வல்லவரான தேவராஜ், போதையில் இருந்தபோதும் அந்த கண்ணாடி விரியன் பாம்பை பிடித்துள்ளார். அதனை வைத்து போதையில் வித்தை காட்டுவதுபோல் பேசிக்கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்க்க கூடினாரக்ள். அங்கிருந்த சிலர், இது கண்ணாடி விரியன் பாம்பு, இதனிடம் விளையாட வேண்டாம். அதனை விட்டு விட்டு வீட்டுக்கு போகுமாறு கூறியுள்ளனர்.
ஆனால் தேவராஜ் போதை தலைக்கு ஏறிய நிலையில், பார்த்துக்குட்டே இரு, எனக்கு பாம்புகளை பற்றி நன்றாக தெரியும். என்கிட்டயே பாம்பை பத்தி பேசுற என பதில் அளித்துவிட்டு, கண்ணாடி விரியன் பாம்பை வைத்து நீண்ட நேரம் வித்தை காட்டிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கண்ணாடி விரியன் பாம்பு, அவரை கை உள்ளிட்ட பல இடங்களில் ஆக்ரோஷமாக கடித்தது. இதில் அவர் சுருண்டு விழுந்தார்.
இதை வேடிக்கை பார்த்த அதிர்ச்சி அடைந்த மக்கள், உடனடியாக கண்ணாடி விரியன் பாம்பை அடித்துக்கொன்று விட்டு தேவராஜை மீட்டனர். பின்னர் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கண்ணாடி விரியன் பாம்பின் விஷம் மூளைக்கு சென்றதால் தேவராஜ் சிறிது நேரத்திலேயே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதனிடையே தேவராஜ், கண்ணாடி விரியன் பாம்பை வைத்து வித்தை காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications