வேலூர் அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி.. வாயை பொத்தி வேட்டையாடிய மிருகங்கள் சிக்கியது எப்படி?
வேலூர்: வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அருகே கடந்த சனிக்கிழமை அன்று இயற்கை உபாதை கழிக்க சென்ற 14 வயது சிறுமியை, வீட்டின் அருகே கல்குவாரிக்கு தூக்கிச் சென்ற இளைஞர்கள், மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 மூன்று இளைஞர்களையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி, கடந்த சனிக்கிழமை இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டின் அருகே உள்ள புதர் பகுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 28 வயதாகும் வீரப்பன் , 28 வயதாகும் மதன் என்கிற இளமதன் , 30 வயதாகும் சின்ராசு ஆகியோர் சிறுமி புதர் பக்கம் செல்வதை பார்த்துள்ளனர். அவர்கள் 3 பேரும் திடீரென சிறுமியின் வாயைப் பொத்தி அப்பகுதியில் உள்ள கல்குவாரிக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு வைத்து சிறுமியை 3 பேரும் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் மகளை தேடி தந்தை சென்றார். சிறுமியின் தந்தை வருவதை அறிந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்கள்.

நடந்ததை சிறுமி கூறியதை கேட்ட சிறுமியின் தந்தை கடும் அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக பள்ளிகொண்டா போலீசில் புகார் செய்தார். இதையடுத்து டிஎஸ்பி சாரதி தலைமையிலான தனிப்படை போலீசார் 3 பேரையும் பிடித்தனர். தொடர்ந்து அவர்கள் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காஞ்சனா வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். 3 பேரையும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் வேலூர் ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், வேலூரில் 13 வயது சிறுமியை மது போதையில் இருந்த மிருகங்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். ஆட்சிக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளதாவது: வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியைச் சேர்ந்த மது போதையில் இருந்த 3 மனித மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. திராவிட மாடல் ஆட்சியில் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
இரவு நேரத்தில் இயற்கையின் அழைப்புக்காக வீட்டிற்கு அருகில் உள்ள புதர் பகுதிக்கு சென்ற சிறுமியை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மூவர் தூக்கிச் சென்று அருகில் உள்ள கல்குவாரியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சிறுமியைக் காணாமல் தேடிய அவரது தந்தை அருகில் உள்ள கல்குவாரியிலிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடிச்சென்று காப்பாற்றியுள்ளார். இது குறித்து அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் சிறுமியின் தந்தை அளிக்க புகாரை வாங்க மறுத்த காவலர்கள், இன்னொரு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். அங்கும் புகார் பெற்றுக் கொள்ளப்படாத நிலையில், சிறுமியின் உறவினர்கள் போராட்டம் நடத்தியதற்கு பிறகு தான் முதல் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டுள்ளது.

திராவிட மாடல் ஆட்சியில் அரசு மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லை, நீதிமன்றங்களில் வழக்காடும் வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவை அனைத்தையும் கடந்து 13 வயது சிறுமிக்கு அவர் வாழும் வீட்டுக்கு அருகிலேயே பாதுகாப்பு இல்லை என்றால் தமிழ்நாட்டில் எவ்வளவு மோசமான ஆட்சி நடைபெறுகிறது? அதை விடக் கொடுமை என்னவென்றால், இத்தகைய குற்றச்சம்பங்கள் நடக்காமல் தடுத்திருக்க வேண்டிய காவல்துறை, சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை குறித்த புகாரைக் கூட வாங்காமல் அவரது குடும்பத்தினரை அலைக்கழித்திருக்கிறது.
அனைத்துக் குற்றங்களுக்கும் மூல காரணம் மது மற்றும் போதைப்பழக்கங்கள் தான்; அதனால் அவற்றுக்கு முடிவு கட்டுங்கள் என்று தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஒருபுறம் போதையின் பாதையை தவிருங்கள் என்று கூறிக் கொண்டு இன்னொரு புறம் மது வணிகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இது தான் மக்கள் நலன் காக்கும் அரசுக்கான இலக்கணமா? என்பது தெரியவில்லை. சிறுமியை வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தருவதுடன், மதுக்கடைகளை உடனடியாக மூடவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. கூட்டுப் பாலியல் வன்கொடுமையிலிருந்து சிறுமியை பாதுகாப்பதற்குக் கூட திறனற்ற அரசு தொடர்ந்து பதவியில் நீடிக்க எந்தத் தகுதியும் இல்லை. தமிழக அரசுக்கு எதிராக மக்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கின்றனர். வெகு விரைவிலேயே அவர்கள் கொதித்தெழுவார்கள்.... அரியலூர் ரயில் விபத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அன்றைய ரயில்வேத் துறை அமைச்சர் அழகேசனுக்கு எதிராக திமுகவினர் முழக்கிய வாசகங்களை இன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் முழங்குவார்கள். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை." இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications