ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து வந்த போன்.. வேலூர் காட்பாடியில் சிக்கிய இளைஞர்.. கோபம் தந்த பாடம்
வேலூர்: ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ரயில் நிலையத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் அவசர உதவி எண் 100 மற்றும் 108 மூலம் கட்டுப்பாட்டு அறைகளுக்கு போன் செய்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரெயிலை கடத்தப்போவதாக கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்தார். அவரை வேலூர் காட்பாடி ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். ஏன் இப்படி செய்தார் என்று கேட்ட போது போலீசார் ஆடிப்போனார்கள்..
ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் தினமும் சென்னையில் இருந்தும், மறுமார்க்கமாக ஈரோட்டில் இருந்தும் தினமும் சென்று வருகிறது. அப்படித்தான் ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து கடந்த 9ம் தேதி அன்று இரவு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இரவு 11.50 மணி அளவில் மொரப்பூர் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தது.

அப்போது மொரப்பூர் ரயில் நிலையத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் அவசர உதவி எண் 100 மற்றும் 108 மூலம் கட்டுப்பாட்டு அறைகளுக்கு போன் செய்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்தப் போவதாக கூறியிருக்கிறார். அப்படியே உடனடியாக யார் என்ன விவரம் என்று கேட்பதற்கு போன் இணைப்பை துண்டித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை ஆய்வு செய்தார்கள்.
அதில், மிரட்டல் விடுத்த நபர் அதே ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பொது பெட்டியில் பயணம் செய்வது தெரியவந்தது. வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்திற்கு ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததும் போலீசார் அந்த வாலிபரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மிரட்டல் விடுத்த இளைஞர் தர்மபுரி அருகே அம்மாசி கொட்டாய் நந்திநகரை சேர்ந்த 25 வயதாகும் சபரீசன் என்பது தெரியவந்தது. இவர் கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்காலிகமாக வேலை செய்து வந்திருக்கிறார்.
தற்போது அவர் வேலையில்லாமல் இருந்து வந்தாராம். அந்த பகுதியில் வேலை தேடிவந்தாராம். சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம் அருகே நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ள மொரப்பூர் ரயில் நிலையம் வந்துள்ளார். அப்போது வேலை இல்லாத விரக்தியில் ரயிலை கடத்தப்போவதாக கோபத்துடன் மிரட்டல் விடுத்ததாக சபரீசன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து போலீசார் சபரீசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வாரிய தற்காலிக ஊழியர் கோபத்தில் செய்த வேலையால் இன்று கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications