கல்யாணமாகி 3 நாள்தான் ஆகுது.. என்னை விட்டுட்டு போய்ட்டியே திவ்யா.. கதறி துடித்த கணவர்
ஏலகிரி அருகே புதுமணப் பெண் விபத்தில் மரணமடைந்தார்
வேலூர்: "கல்யாணம் ஆகி 3 நாள்தான் ஆகுது.. என்னை விட்டுட்டு போய்ட்டியே திவ்யா.. உனக்கு பதில் என் உயிர் போயிருக்க கூடாதா?" என்று விபத்தில் உயிரிழந்த மனைவியை ரத்தம் சொட்ட சொட்ட கட்டிப்பிடித்து கொண்டு அழுதார் கணவன்!
வாணியம்பாடி பெருமாள்பேட்டையை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும், 24 வயது திவ்யாவுக்கும் போன ஞாயிற்றுகிழமை அதாவது 1ம் தேதிதான் கல்யாணம் ஆனது.

புதுமண தம்பதி இருவரும் வியாழக்கிழமை பைக்கில் அருகில் உள்ள ஏலகிரி மலைக்கு சுற்றி பார்க்க சென்றனர். பிறகு சாயங்காலம் ஆகிவிட்டதால், மலையிலிருந்து பைக்கில் கீழே இறங்கி கொண்டிருந்தனர்.
அப்போது 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, கார் ஒன்று எதிரே வேகமாக வந்தது. இதை பார்த்ததும், மணிகண்டன் நிலைதடுமாறியதுடன், பைக்கை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் அங்கிருந்த தடுப்புச் சுவரில் மோதிவிட்டார். இதில் பைக்கில் இருந்த மணிகண்டன், திவ்யா இருவருமே பலத்த காயமடைந்து ஆளுக்கு ஒரு பக்கம் கீழே விழுந்தனர்.

திவ்யாவின் தலை அங்கிருந்த சுவற்றில் பலமாக மோதியதில் ஒருசில வினாடிகளிலேயே உயிர் பிரிந்தது. கண் முன்னாடியே மனைவி உயிரிழந்ததை பார்த்த மணிகண்டன், ரத்தம் சொட்ட சொட்ட எழுந்து வந்து திவ்யாவை கட்டிப்பிடித்து "உனக்கு பதில் என் உயிர் போயிருக்க கூடாதா" என்று மணிகண்டன் கதறினார்.
இதை அங்கிருந்த பொதுமக்கள், மற்றும் சுற்றுலா பயணிகள் கண்டு கண்கலங்கினர். எவ்வளவோ முயன்றும், திவ்யாவை மணிகண்டன் விடவே இல்லை. கட்டிப்பிடித்தவாறே அழுது கொண்டிருந்தார். தகவலறிந்து வந்த ஏலகிரி போலீசார் இது சம்பந்தமான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications