துருப்பிடித்த மூடி.. விக்கிரவாண்டி தனியார் பள்ளி செப்டிங் டேங்கில் விழுந்து குழந்தை இறந்தது எப்படி?
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள செப்டிக் டேங்க் துருப்பிடித்து இருந்த நிலையில் அதன் மேல் ஏறிய மூன்றரை வயது குழந்தை உள்ளே விழுந்து பலியாகி இருக்கும் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இ-சேவை மையம் உள்ளது. இங்கு ஒப்பந்த பணியாளராக பழனிவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் சிவசங்கரி.

இந்த பழனிவேல் - சிவசங்கரி தம்பதிக்கு மூன்றரை வயதில் லியா லட்சுமி என்ற குழந்தை இருந்தது. இந்த குழந்தை விக்கிரவாண்டி காவல் நிலையம் அருகேயுள்ள தனியார் மெட்ரிக்குலேசன் உயர்நிலைப்பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளது.
இன்று காலையில் குழந்தை பள்ளிக்கு சென்றது. மதியம் 1.50 மணி அளவில் இயற்கை உபாதையை கழிக்க பள்ளி வகுப்பறையில் இருந்து அருகே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளது. அதன்பிறகு குழந்தை மீண்டும் திரும்ப வரவில்லை. இதனால் ஆசிரியைக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து கழிவறை அருகே சென்று ஆசிரியர்கள் தேடினர். அப்போது செப்டிக் டேங்க் மீது போடப்பட்டு இருந்த இரும்பு மூடி உடைந்து கிடந்தது. இதனால் குழந்தை செப்டிங் டேங்கிற்குள் விழுந்து இருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
உடனடியாக விக்கிரவாண்டி போலீசாருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து செப்டிங் டேங்கை பார்த்தனர். அப்போது குழந்தை அதில் விழுந்து கிடந்தது. குழந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டனர். பள்ளி நிர்வாகத்தினர் காரில் குழந்தையை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கழிவறை செல்வதாக சென்ற குழந்தை செப்டிங் டேங்க் மீது ஏறியதாகவும், அப்போது செப்டிங் டேங்க் மீது போடப்பட்டு இருந்த இரும்பு தகடு துருப்பிடித்து இருந்ததால் குழந்தை மிதித்ததும் உடைந்ததும், குழந்தை செப்டிங் டேங்கிற்குள் விழுந்து இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி கேள்வி பட்டவுடன் குழந்தையின் குடும்பத்தினர் கதறி அழுதனர். பள்ளி நிர்வாகத்தின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்ததாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பிற குழந்தைகளின் பெற்றோர்கள் இணைந்து பள்ளி வாயில் முன்பாக விழுப்புரம் - சென்னை செல்லும் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே குழந்தை தவறி செப்டிக் டேங்கில் விழுந்தபின் ஆசிரியர்கள் மீட்டு காரில் சிகிச்சைக்காக ஏற்றிச் செல்வது அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சி வெளியாகி வலைதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications