உதயசூரியனுக்கு விழுந்த இலைக்கட்சி ஓட்டுகள்.. ரிசல்ட்ல கன்ஃபார்ம் ஆகிடுச்சு.. சொல்வது திருமாவளவன்!
விழுப்புரம்: இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்தே பழக்கப்பட்ட அதிமுகவினரும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் உதயசூரியனுக்கு வாக்களித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 14 ஆம் தேதி துவங்கியது. 64 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 29 வேட்பாளர்கள் தகுதி பெற்றனர்.

திமுக சார்பில் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிட்டனர். அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. இத்தேர்தலில் போட்டியிடவில்லை என அதிமுக ஒதுங்கிக் கொண்ட நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி என மும்முனை போட்டி நிலவியது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 031 வாக்காளர்களில், 99 ஆயிரத்து 944 பெண் வாக்காளர்கள் உட்பட 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 வாக்காளர்கள் வாக்களித்தனர். அதிமுக தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவித்த நிலையில் வாக்குப்பதிவு அதிகரித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதிமுக ஓட்டு யார் பக்கம்?: அதிமுக வாக்குகள் யார் பக்கம் சென்றிருக்கும் என பெரிய கேள்வி எழுந்த நிலையில் அதற்கு இன்று விடை கிடைத்துள்ளது. ஜெயலலிதா படத்தை வைத்து ஓட்டு கேட்ட பாமகவுக்கோ, நேரடியாக ஆதரவு கேட்ட சீமானுக்கோ, நோட்டாவுக்கோ வாக்களிக்காமல் அதிமுகவினர் பெரும்பாலும் திமுகவுக்கே வாக்களித்துள்ளது இன்றைய வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின் மூலம் தெரியவருகிறது.
இன்று காலை 8 மணி முதல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதன்படி 8 சுற்றுகள் முடிவில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 57,393 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 24,130 வாக்குகளை பெற்றுள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 4,704 வாக்குகள் பெற்றுள்ளார். 33 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது திமுக.
திருமாவளவன் பேட்டி: இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசியுள்ள அவர், "விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மாபெரும் வெற்றியைப் பெறுவார் என்பது கணிக்கப்பட்ட ஒன்றுதான். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவைச் சார்ந்தவர்களும் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர் என்பது தெளிவாகிறது.
அதிமுக வாக்குகள் பாமகவுக்கோ, வேறு வேட்பாளர்களுக்கோ செல்லும் என பலரும் கூறினர். ஆனால், இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்தே பழக்கப்பட்ட அதிமுகவினரும் இந்த முறை உதயசூரியனுக்கு வாக்களித்துள்ளனர் என்பதை இந்த முடிவு நமக்கு உணர்த்துகிறது." எனத் தெரிவித்துள்ளார்.
எடுபடல: மேலும் பேசிய திருமாவளவன், "3 ஆண்டுகால திமுக ஆட்சிக்கு மக்கள் அளித்துள்ள நற்சான்று இது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு செல்வாக்கு நீடிக்கிறது என்பதற்கு இந்த இடைத்தேர்தல் முடிவுகளே சான்று. எதிர்க்கட்சிகளின் எதிர்மறையான விமர்சனம் மக்களிடம் எடுபடவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications