பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? தூது அனுப்பிய எடப்பாடி! ராமதாஸ் - சிவி சண்முகம் மீண்டும் சந்திப்பு
விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாசை அவரது இல்லத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்பியுமான சிவி சண்முகம் மீண்டும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் மேற்கொண்டுள்ளது. வரும் மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் தேர்தல் களம் கொதிக்க ஆரம்பித்துவிட்டது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் மக்களவை தொகுதியும் என இரு கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு விட்டது. ஏனைய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட்ட அதிமுக மெகா கூட்டணி அமைக்கப்படும் எனக் கூறி வருகிறது. பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த மாத துவக்கத்தில் அதிமுக எம்பி சிவி சண்முகம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற வேண்டும் என்ற விருப்பத்தை சிவி சண்முகம் வெளிப்படுத்தியதாக சொல்லப்பட்டது. அதன்பிறகு திரைமறைவு பேச்சுவார்த்தை மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை.
நேற்று முன் தினம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக எம் .எல்.ஏக்கள் சந்தித்தாக தகவல் பரவியது. எனினும் பாமக எம்.எல்.ஏக்கள் இதை மறுத்தனர். அதிமுக - பாமக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், நேற்று பாமக நிறுவனர் ராமதாசை சிவி சண்முகம் மீண்டும் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று இருக்கலாம் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications