விழுப்புரம் அரசூர் மக்கள் மறியல் போராட்டம் வாபஸ்! சென்னை- திருச்சி சாலையில் சீரான போக்குவரத்து
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட கிராம மக்கள் உணவு, தண்ணீர் கேட்டு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் தற்போது மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சீராகி வருகிறது.
பெஞ்சல் புயலானது கடந்த சனிக்கிழமை கரையை கடந்த போது வடதமிழகத்தை பதம்பார்த்துவிட்டு சென்றது.எந்த நேரத்தில் அதற்கு பெஞ்சல் என பெயரிடப்பட்டதோ மழை பெய்தே மக்களை இன்னலுக்குள்ளாக்கிவிட்டது.

வடதமிழகத்தில் பெய்த மழையால் நீர் நிலைகள் நிரம்பியும் உடைத்துக் கொண்டும் ஊருக்குள் வந்துவிட்டது.
இந்த நிலையில் தென்பெண்ணை ஆற்றில் கரைபுரண்ட வெள்ளத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. 2 நாட்களாகியும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யப்படவில்லை.
இதனால் தங்களுக்கு உணவு, குடிநீர் வழங்குமாறு போராட்டம் நடத்தி வந்தனர். இதனால் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல கி.மீ. நீளத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவலறிந்த கோட்டாட்சியர் சார்பில் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் மறியலை கைவிடவில்லை.
இதையடுத்து சிறிது நேரம் கழித்து ஆட்சியர் பழனி, மாவட்ட எஸ்பி ஆகியோர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாக ஆட்சியர் பழனி உறுதியளித்தார். இதனால் மறியலை கைவிட மக்கள் ஒப்புக் கொண்டனர்.
ஏற்கெனவே வெள்ளத்தால் கடலூர்- சென்னை தேசிய நெடுஞ்சாலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் விக்கிரவாண்டியில் மோசமான வெள்ளத்தால் வாகனங்கள் திருக்கோவிலூர், திருவண்ணாமலை, திண்டிவனம் மார்க்கத்தில் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மறியலால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.












Click it and Unblock the Notifications