யூடர்ன் போட்ட 50+ வாகனங்கள்... விஜய் தவெக மாநாட்டில் பங்கேற்காமல் திரும்பும் தொண்டர்கள்! என்ன காரணம்
விழுப்புரம்: விக்கிரவாண்டியில் நடைபெறும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டிற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரண்டு வருகிறார்கள். இதற்கிடையே திருச்சியில் இருந்து மாநாட்டிற்கு வந்த 50+ வாகனங்கள் மாநாட்டில் பங்கேற்காமல் திரும்பச் சென்றுள்ளது. இதற்கு என்ன காரணம்.. பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது வழக்கமான ஒன்றுதான். எம்ஜிஆர், ஜெயலலிதா தொடங்கி எல்லாரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் தான்.

அதேபோல தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என்று பல ஆண்டுகளாகவே சொல்லப்பட்டு வந்தது. விஜய்யின் படம், பாடல் வெளியீட்டு விழாக்களின் பேச்சுகளிலும் அரசியல் எதிரொலித்தது.
இந்தச் சூழலில் தான் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் தொடங்கிய அவர், சினிமாவுக்கு இடையே அரசியல் பணிகளையும் கவனித்து வருகிறார். லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு கட்சிக்கான கொடி மற்றும் பாடலை வெளியிட்டார்.
இப்போது ஹெச். வினோத் இயக்கத்தில் படத்தில் நடித்து வரும் விஜய் இத்துடன் சினிமாவுக்கு முழுமையாக முழுக்கு போட்டுவிட்டு அரசியலுக்குக் கவனம் செலுத்த உள்ளார். இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டியில் உள்ள வி. சாலை என்ற இடத்தில் நடைபெறுகிறது. இன்று மாலை 3 மணியளவில் மாநாடு தொடங்கியது.
இருப்பினும், நேற்றிரவு முதலே மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாநாட்டிற்கு தொண்டர்கள் விஜய் ரசிகர்கள் திரண்டனர். அதன்படி திருச்சியில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் தொண்டர்கள் மாநாட்டிற்குக் கிளம்பினர். இதற்கிடையே அவர்கள் இப்போது மாநாட்டில் கலந்து கொள்ளாமலேயே திரும்புவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மாநாட்டிற்கு வரும் வழியில் கார் ஏற்பட்ட கார் விபத்தில் திருச்சி தவெக நிர்வாகி உயிரிழந்தார். இதன் காரணமாகவே தவெக மாநாட்டு வந்த 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் திரும்பிச் செல்வதாகக் கூறப்படுகிறது. இன்று காலை சென்னையில் இருந்து 2 வீலரில் மாநாட்டிற்கு வந்த ஒருவர், மாநாட்டுப் பந்தலைப் பார்த்து ஆர்வ மிகுதியில் ரயிலில் இருந்து குதித்த ஒருவர் என இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சூழலில் மீண்டும் விபத்து நடந்துள்ளது தொண்டர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி சாலையில் நடைபெறுகிறது. மாநாடு நடக்கும் திடலில் இருபுறமும் சுமார் 3 கிமீ தொலைவில் கார் பார்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், கார் பார்கிங் மதியமே நிரம்பிவிட்ட நிலையில், ஆங்காங்கே தொண்டர்கள் சாலை ஓரங்களிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு வருகிறார்கள். இதனால் இருபுறமும் பெரியளவில் டிராபிக் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
மாநாடு நடக்கும் இடத்தில் இருந்து சுமார் 10 கிமீ தொலைவுக்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், சுமார் 80+ தொண்டர்கள் தண்ணீர் இல்லாமல் மயங்கி விழும் சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் அங்குப் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications