விழுப்புரம் சர்ச்சைக்குரிய ரயில்வே பாலம்.. காவல்துறை கட்டுப்பாட்டில் வந்தது.. மக்கள் ஹேப்பி!
விழுப்புரம்: விழுப்புரம் ரயில்வே மேம்பாலத்தில் அரசியல் கட்சியினருக்கு இடையே விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, பிரச்னைக்குரிய மேம்பால சுவர் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் அந்த சுவற்றில் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஓவியங்களை வரையப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள இந்த மேம்பால சுவற்றின் இருபுறமும் அரசியல் கட்சிகள் தங்களுடைய கட்சி விளம்பரங்களை செய்து வருகின்றனர். ரயில்வே நிர்வாகத்திடம் இதற்கான எந்த அனுமதியும் பெறுவதில்லை.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு விழுப்புரத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்த திமுக தலைவர் ஸ்டாலினை வரவேற்று திமுகவினர் ரயில்வே மேம்பாலத்தில் உள்ள சுவர்களில், ஏற்கனவே அதிமுகவினர் வரைந்திருந்த சுவர் விளம்பரங்களை மறைத்து, விளம்பரங்களை வரைந்தனர். இதனால் அதிமுக - திமுக இடையே கடும் மோதல் ஏற்பட்டது. மேலும் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழலும் உருவானது.
இந்நிலையில் ரயில்வே மேம்பால சுவர்களில் யாரும் விளம்பரம் செய்யாத வகையில், காவல் துறையினர் தற்போது வெள்ளையடித்து தமிழ்நாடு காவல்துறை என எழுதி வைத்துள்ளனர். மேலும் அந்த சுவற்றில் சாலை பாதுகாப்பு தொடர்பான ஹெல்மெட் விழிப்புணர்வு, போக்குவரத்து விதிமுறைகள் சம்பந்தமான விழிப்புணர்வு படங்களை தீட்ட துவங்கியுள்ளனர்.
பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை மட்டுமே ரயில்வே மேம்பாலத்தில் பார்த்து சென்ற மக்களுக்கு, இந்த விழிப்புணர்வு விளம்பரங்கள் பெரும் வரவேற்பை பெற்று தந்துள்ளது.
Recommended Video
போலீசாரின் நடவடிக்கைக்கு பொது மக்கள் மத்தியில் பாராட்டும் குவிந்து வருகிறது. இதேபோல் நகரத்தில் அரசியல் கட்சிகள் அடிக்கடி விளம்பரம் செய்து வரும் சுவற்றையும், காவல்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.