6 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணி கைது.. போலீஸாரே அதிர்ந்த பகீர் பின்னணி!
விழுப்புரம்: 6 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை அபேஸ் செய்து கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே சிறுதலைப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பூண்டியான். இவருடைய மகன் மணிகண்டன்(29), விவசாயி. இவருக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் மகாலட்சுமி முகநூல் மூலம் அறிமுகமானார்.

தொடக்கத்தில் இருவரும் நட்பாக பழகி வந்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் செல்போனில் பேசத் தொடங்கினர். மணிகண்டன், மகாலட்சுமியை பார்க்க ஆசைப்பட்டுள்ளார். இதனால் அவரிடம் போட்டோ கேட்டுள்ளார்.
இதற்கு சுடிதார் அணிந்தபடி ஸ்டைல் லுக்கில் ஒரு போட்டோவை மகாலட்சுமி அனுப்பியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த மணிகண்டனுக்கு மகாலட்சுமி "மகாலட்சுமி" போல் இருக்கிறாரே என அவருடைய அழகில் மயங்கியுள்ளார். பின்னர் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதையடுத்து மகாலட்சுமியிடம் திருமணம் குறித்து மணிகண்டன் பேசியுள்ளார்.
இதற்கு மகாலட்சுமியும் ஒப்புக் கொண்டார். ஆனால் தனது வீட்டில் யாரும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். தான் மட்டுமே திருமணத்திற்கு வர வேண்டும் என மகாலட்சுமி ஒரு பொடி வைத்துள்ளார். இதை மணிகண்டனும் ஒப்புக் கொண்டார். இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி இவர்களுக்கு மேல்மலையனூரில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடந்தது.
திருமணத்தின் போது மகாலட்சுமிக்கு மணிகண்டன் வீட்டிலிருந்து 8 பவுன் நகை போட்டுள்ளனர். இந்த நிலையில் காதலியை கரம் பிடித்த மகிழ்ச்சியில் இருந்த மணிகண்டன் இல்லற வாழ்க்கையில் இணைய முயன்ற போது மகாலட்சுமி, தனது வீட்டில் சொத்து பிரச்சினை உள்ளது. அதற்காக கையெழுத்து போட தன்னை அழைத்தார்கள். எனவே தான் மட்டும் போய்விட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மகாலட்சுமியை ஊருக்கு அனுப்பி வைத்த மணிகண்டன் அவருக்காக காத்திருந்தார். இந்த நிலையில் திருமணமான 26 ஆவது நாள் கடந்த ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி மகாலட்சுமி மேட்டுப்பாளையத்திற்கு செல்வதாக கூறியிருந்தார். இதையடுத்து மனைவிக்கு ஒரு முறை போன் செய்தபோது அவர் போனை எடுக்கவில்லை. வீட்டில் இருந்த ரூ 1 லட்சமும் ரொக்கத்தையும் காணவில்லை. இதனால் மகாலட்சுமி மீது மணிகண்டனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
மகாலட்சுமிக்கு போன் செய்து நகை, பணம் குறித்து மணிகண்டன் கேட்டுள்ளார். இதற்கு மகாலட்சுமியோ தனக்கு அடிக்கடி போன் செய்து கொண்டே இருந்தால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் வளத்தி காவல் நிலையத்தில் மகாலட்சுமி மீது புகார் கொடுத்தார். இதையடுத்து தனிப்படை அமைத்து தேடிவந்தநிலையில் மகாலட்சுமி சேலத்தில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸார் சேலத்திற்கு விரைந்து சென்று மகாலட்சுமியை மடக்கி பிடித்து வளத்தி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அப்போது அவர் சொல்வதை கேட்டு போலீஸாரே அதிர்ந்தனர். மகாலட்சுமி ஏற்கெனவே 4 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். 5வதாக சிக்கியவர்தான் மணிகண்டன்.
இது போல் தன்னிடம் ஜொல்லு விடும் ஆண்களை குறி வைத்து அவர்களை திருமணம் செய்து கொண்டு வீட்டில் இருக்கும் பணத்தையும் நகையையும் சுருட்டிக் கொண்டு ஓடி விடுவது மகாலட்சுமியின் பாணியாக இருந்துள்ளது. இந்த பணத்தை வைத்துக் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழும் மகாலட்சுமி அவை தீர்ந்து போனதும் மீண்டும் தனது திருமண லீலைகளை தொடர்வார்.
மணிகண்டனுக்கு டிமிக்கிக் கொடுத்துவிட்டு மாயமான மகாலட்சுமி சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுக்கா குமாரப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சின்ராஜ் என்பவரை 6 ஆவதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது. 5 ஆம் வகுப்பு வரை படித்துள்ள மகாலட்சுமியின் வயது 32 ஆகும்.
மணிகண்டனை திருமணம் செய்யும் போது அவரை விட மணிகண்டனுக்கு 2 வயது கூடுதல். ஆனாலும் குறைத்தே சொல்லி மகாலட்சுமி திருமணம் செய்துள்ளார். மகாலட்சுமிக்கு 17 வயது, 15 வயதில் இரு மகன்களும் 14 வயதில் ஒரு மகளும் இருக்கிறார். இதையடுத்து மகாலட்சுமியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மகாலட்சுமியின் முதல் கணவர் நீலகிரி மவட்டம் கோத்தக்கிரியை சேர்ந்த பாலகிருஷ்ணன். இவருக்கு பிறந்தவர்கள்தான் அந்த 3 குழந்தைகளும். பாலகிருஷ்ணன் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.












Click it and Unblock the Notifications