ஆதாரை சரிபார்த்த பின்பே பத்திரப்பதிவு.. காலிமனை பதிவில் அதிரடி மாற்றம்.. பதிவுத்துறை தலைவர்
விழுப்புரம்: ஆதார் அட்டையை சரிபார்த்த பின்னரே பத்திரப்பதிவு செய்யப்படுவதாகவும், தமிழ்நாட்டை பின்பற்றி மற்ற மாநிலங்கள் தற்போதுதான் ஆதார் அட்டையை கொண்டு பதிவு செய்யும் நடைமுறையை தொடங்கியுள்ளனர் என்றும் பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் பேட்டி அளித்துள்ளார்.
தமிழக பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் அடிக்கடி ஏதாவது ஒரு மாவட்டத்திற்கு சென்று சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆய்வில் ஈடுபடுவது வழக்கம், அந்த வகையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு ஆய்வுக்காக நேற்று வந்தார். அங்கு இணை சார்பதிவாளர் அலுவலகம் எண்-1 இயங்கி வருகிறது. இங்கு சென்று பத்திரப்பதிவு குறித்து ஆய்வு நடத்தியவர், பின்னர் முக்கிய கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது கடலூர் மண்டல துணை பதிவுத்துறை தலைவர் ஜனார்த்தனம், விழுப்புரம் மாவட்ட பதிவாளர்கள் புவனேஸ்வரி (நிர்வாகம்), விஜயலட்சுமி (தணிக்கை) உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதனிடையே ஆய்வுப்பணிகள் முடிந்த பின்னர் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.. அப்போது அவர் கூறுகையில், நாங்கள் வழக்கமாக மேற்கொள்ளும் ஆய்வுதான். ஒவ்வொரு மாவட்டமாக பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று நாங்கள் ஆய்வு மேற்கொள்வோம். களப்பணி பத்திரப்பதிவுகளுக்கு தேவைப்படும் . எனவே அப்படிப்பட்ட பத்திரத்துக்கு களப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து, அதற்கான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தேன்..
தற்போது தமிழ்நாட்டை பொறுத்தவரை போலியான ஆவணங்கள், முறைகேடான ஆவணங்களை கொண்டு பதிவு செய்யப்பட்ட பத்திரங்களை ரத்து செய்யும் அதிகாரம் அந்தந்த மாவட்ட பதிவாளருக்கு வழங்கப்பட்டிக்கிறது. இதன் மூலம் போலியாக, முறைகேடான ஆவணங்களை ரத்து செய்யும் நிலை உருவானது.. ஆனால் இந்த ரத்து அதிகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.. இந்த வழக்கு விசாரணை முடிந்த பின்னர், முறையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக பதிவுத்துறை மற்ற மாநிலங்களுக்கெல்லாம் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறது. தமிழகத்தில் எந்தவொரு ஆவணத்தையும் பதிவு செய்யும்போது சம்பந்தப்பட்டவரின் ஆதார் அட்டையை கொண்டு சரிபார்த்த பின்னரே பத்திரப்பதிவு செய்கிறோம். தமிழ்நாட்டை பின்பற்றி மற்ற மாநிலங்கள் தற்போதுதான் ஆதார் அட்டையை கொண்டு பதிவு செய்யும் நடைமுறையை தொடங்கி இருக்கின்றன..

முறையற்ற பதிவுகளையும் தவறான பதிவுகளை தடுப்பதற்காகத்தான் இணையவழியில் பத்திரப்பதிவு முறையை கொண்டு வந்ததற்கு முக்கிய காரணம் ஆகும். 100 சதவீதம் வெளிப்படைத்தன்மை, நேர்மையான நிர்வாகம் வேண்டும் என்பதே பதிவுத்துறையின் நோக்கம் ஆகும்.. அதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறோம்.
காலிமனை இடங்களை பதிவு செய்யும் போது அந்த இடத்தை புகைப்படம் எடுத்து பத்திரப்பதிவின்போது அதனை கொடுக்க வேண்டும் என அறிவித்து இந்த நடைமுறையை அக்டோபர் 1-ந் தேதி முதல் அமல்படுத்தி உள்ளோம். தற்போது செல்போன் மூலமாகவும் காலிமனை இடங்களை புகைப்படம் எடுத்து பத்திரப்பதிவின்போது அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளோம். இதன் மூலம் காலிமனையின் தற்போதைய நிலை தெரிந்து விடுவதோடு மட்டுமின்றி முறையற்ற, தவறான ஆவணப்பதிவு செய்வது முற்றிலும் தடுக்கப்படுகிறது" இவ்வாறு பதிவுத்தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் கூறினார்.












Click it and Unblock the Notifications