பெண் எஸ்பி பாலியல் புகார்....சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனு தள்ளுபடி.. இறுகுகிறது பிடி
டிஜிபி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
விழுப்புரம்: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை தந்தது தொடர்பான வழக்கை, நீதிமன்றம் விசாரிக்க கூடாது என்று சிறப்பு டிஜிபி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்தபோது காவல்துறை சிறப்பு டிஜிபி, தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் எஸ்பி ஒருவர் புகார் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து அப்போதைய டிஜிபி மற்றும் உள்துறைச் செயலரிடம் அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி புகார் அளித்திருந்தார்.. இதுகுறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள பெண் அலுவலர் தலைமையில் விசாரணை கமிட்டியும் அமைக்கப்பட்டது.

பரபரப்பு
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது... இதனையடுத்து காவல்துறை சிறப்பு டிஜிபி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.. அத்துடன், பாலியல் புகார் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து விழுப்புரம் சிபிசிஐடி போலீசாரும், முன்னாள் டிஜிபி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ஹைகோர்ட்
இதனிடையே, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது... ஆனால், புகார் மீதான விசாரணை தொடர்பாக தனி நீதிபதி கண்காணித்து வருவதால், சிபிஐ விசாரணைக்கு அவசியம் இல்லை என்று சொல்லி இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்து உத்தரவிட்டனர்... தற்போது இந்த வழக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் துரிதமாக நடந்து வருகிறது...

உத்தரவு
கடந்த ஏப்ரல் 23-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார்... அதேபோல, சுமார் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையும் கடந்த மாதம் 30 ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.. மேலும், பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபிக்கு உதவி செய்ததாக 3 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

மனு தள்ளுபடி
இதனிடையே, பாலியல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரியும், வழக்கை நீதிமன்றம் விசாரிக்க கூடாது என்று தடைகோரியும் சிறப்பு டிஜிபி மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.. அந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், டிஜிபியின் மனுவை தள்ளுபடி செய்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது... சிறப்பு டிஜிபி மனு தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளதால், அவர் மீதான பிடி இறுகுகிறது..!












Click it and Unblock the Notifications