அதை செய்யுங்க.. நேருக்கு நேர் எங்கு வேண்டுமானாலும் விவாதிக்கலாம்.. முதல்வருக்கு பொன்முடி சவால்
விழுப்புரம்: ஊழல் வழக்கில் பெற்ற தடை உத்தரவை விலக்கி கொண்டு வந்தால் எங்கு வேண்டுமானாலும் நேருக்குநேர் விவாதிக்க தயார் என முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி சவால் விடுத்துள்ளார்.
அண்மையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் பேசும் போது, விவாதத்திற்கு தயார் என்று நான் அறிவித்துவிட்டேன் , ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் தான் வர மறுக்கிறார் என கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் திமுக துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி நேற்று வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்திற்கே சென்று தடை வாங்கிய முதல்வர் பழனிசாமி, 'பெங்களூர் வருகையால்' மனக்குழப்பத்திலும், சஞ்சலத்திலும், தடுமாற்றத்திலும், ஏன், என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சத்திலும் இருப்பது எல்லோர்க்கும் புரிகிறது.
தடை உத்தரவு
அதனால் கூட்டம் தோறும் பிரசாரம் என்ற பெயரில், பச்சைப் பொய்களை, கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார். அவரது இயலாமையை மறைக்க, மு.க.ஸ்டாலினை விவாதத்திற்கு அழைக்கிறார். ஊழல் வழக்கில் ஓடோடிச் சென்று பெற்ற தடை உத்தரவை விலக்கிக் கொண்டு, எங்கு வேண்டுமானாலும் வாருங்கள், நேருக்கு நேர் பேசுவோம் என்று ஏற்கனவே கூறி விட்டார்.
புதிய நடைமுறை
அதன் பிறகு வாயை மூடிக் கொண்டிருந்த முதல்வர் பழனிசாமி இப்போது மீண்டும், 'நேருக்கு நேர் விவாதம்' என்று கூறுகிறார் சசிகலா காரில் அதிமுக கொடி கட்டி வரக்கூடாது என்று, டிஜிபி அலுவலகத்திற்கு அமைச்சர்களை அனுப்பி, புதுவித நிர்வாக நடைமுறையைக் கையாண்டார்.
சசிகலா வருகை
அவர்களோ புகாரைக் கொடுத்து விட்டு வெளியில் வந்து பேட்டி கொடுக்கவே ஒருவருக்கு ஒருவர் பயந்து நடுங்கியதை பத்திரிகையாளர்கள் கண்டு ரசித்தார்கள். சசிகலா வருகையால் மிரண்டு, கட்சியை கட்டிக்காக்க முடியாத பழனிசாமி, இப்போது தனது தோல்வியை மறைக்க, எங்கள் தலைவர் உதவிக்கரம் நீட்டுவாரா என்று பார்க்கிறார்.
விவசாய கடன் தள்ளுபடி
முதல்வராக உச்ச நீதிமன்ற தடையை விலக்கிக் கொண்டு வாருங்கள், நாம் இருவரும் நேருக்கு நேர் விவாதிப்போம். விவசாயிகளுக்கு ரூ.7000 கோடிக் கடனை தள்ளுபடி செய்து இந்தியாவிற்கே விவசாயக் கடன் தள்ளுபடிக்கு, முதல்வர் பழனிசாமிக்கே வழிகாட்டியது திமுக ஆட்சி. இவ்வாறு பொன்முடி அறிக்கையில் கூறியுள்ளார்.