ஒளிமயமான எதிர்காலம்.. 2024ல் தமிழகத்துக்கு சட்டசபை தேர்தலாமே? ஈபிஎஸ் சொன்ன பாயிண்ட்! காரணம் இதுதானா?
விழுப்புரம்: இந்தியாவில் 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று விழுப்புரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறது என தொண்டர்களை உற்சாகப்படுத்திய எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற தேர்தலோடு தமிழ்நாட்டுக்கும் சட்டசபை தேர்தல் நடக்கலாம் என குறிப்பிட்ட காரணம் ஒன்றையும் அவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இது தற்போது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுகவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார். இதையடுத்து பொதுச்செயலாளர் தேர்தல் அதிமுகவில் நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே மனுத்தாக்கல் செய்தார். இதனால் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 2022 ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்துக்கு எதிர்க்கும் ஓ பன்னீர் செல்வத்தின் வழக்கால் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுக்கு தடை விழுந்தது. இந்நிலையில் தான் கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை உயர்நீதிமன்றம் ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடலாம் என உத்தரவிட்டது.

அதிமுக பொதுச்செயலாளரான ஈபிஎஸ்
இந்த உத்தரவை தொடர்ந்து அதிமுகபொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியும் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். மேலும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தது தொடர்பான ஆவணங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பொதுச்செயலாளராக சொந்தஊருக்கு..
இந்நிலையில் தான் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வந்ததால் எடப்பாடி பழனிச்சாமி சொந்த ஊரான சேலத்திற்குச் செல்லாமல் இருந்து வந்த நிலையில் இன்று புறப்பட்டார். சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் இருந்து சாலை மார்க்கமாக எடப்பாடி பழனிச்சாமி சேலம் புறப்பட்டார். அதிமுக பொதுச்செயலாளராக அவர் தனது சொந்த மாவட்டமான சேலத்திற்கு சென்றார்.

விழுப்புரத்தில் ஈபிஎஸ்
முன்னதாக விழுப்புரத்தில் நாடாளுமன்ற ராஜ்யசபா எம்பி சிவி சண்முகம் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். இந்த வேளையில் அவர் கூறியதாவது: அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. தொண்டர்களின் நம்பிக்கைக்குரிய நபராக நான் செயல்படுவேன்.

சோதனைகளை கடந்து வெற்றி
திமுக ஆட்சியில் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டு வருகிறது. இவற்றை சட்டரீதியாக எதிர்கொள்வோம். அதிமுக பல சோதனைகளை கடந்து வெற்றி பாதையில் பயணித்த மாபெரும் கட்சி. எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை வென்றெடுப்போம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக மக்கள் பணியை தொடர்ந்து செய்யும்.

2024ல் சட்டசபை தேர்தல்
அதிமுகவை யார் சீண்டினாலும் அவர்கள் தான் அழிந்து போவார்கள். அதிமுகவை அழிக்க பார்த்தால் அது கானல் நீராகத்தான் இருக்கும். அதிமுக மீண்டும் நிச்சயம் ஆட்சியில் அமரும். வரும் நாடாளுமன்ற தேர்தலோடு தமிழகத்துக்கு சட்டசபை தேர்தல் வந்தாலும் வரலாம். அதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல். அதிமுகவிற்கு விடிவு காலம் பிறக்கும். ஒளிமயமான எதிர்காலம் நம் கண்ணுக்கு முன்னால் தெரிகிறது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவோம்'' என பேசி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா?
மேலும் இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமற்றது. இதில் முரண்பாடுகள் உள்ளன என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது தொடக்க நிலையிலேயே தான் உள்ளது. இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டசபை தேர்தல் நடக்கும். அதில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications