திறக்க முடியாத சேஃப்டி லாக்கர்.. கைவிரித்த போலி சாவி நிபுணர்.. விடாமல் போராடும் அமலாக்கத்துறை! பரபர!
விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலை ரெய்டு நடத்தி வரும் நிலையில், பீரோக்களின் சாவி கிடைக்காததால் மாற்றுச் சாவி எக்ஸ்பெர்ட் வரவழைக்கப்பட்டார். அவராலும், ஒரு லாக்கரை திறக்க முடியவில்லை. இதையடுத்து அமலாக்கத்துறையினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
பரபர ரெய்டு: தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை, விழுப்புரத்தில் பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அதேபோல அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை சோதனை நடைபெறும் இடங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி தீவிர காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அமைச்சர் பொன்முடியின் விழுப்புரம் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அங்கு உள்ள இரண்டு பீரோக்கள் மற்றும் லாக்கரை திறக்க சாவியை எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்தனர். பீரோ மற்றும் லாக்கர் சாவி இல்லை என அமைச்சரின் உதவியாளர் கூறியதால் மாற்றுச் சாவி கொண்டு பூட்டுகளை திறக்கும் நபர் வரவழைக்கப்பட்டார்.
பீரோ, லாக்கர் சாவி இல்லை: மாற்றுச்சாவி கொண்டு பூட்டைத் திறக்கும் தொழிலாளியான தனபால் என்பவரை விழுப்புரம் மார்க்கெட் பகுதியில் இருந்து வரவழைத்து மாற்றுச் சாவி போட்டு பீரோக்களை திறந்து சோதனை மேற்கொண்டனர். ஒரு லாக்கரை திறப்பதற்கு போலிச் சாவிகள் கொண்டு எவ்வளவோ முயற்சி செய்தும் திறக்க முடியவில்லை.
தன்னிடம் உள்ள சாவிகளைக் கொண்டு அந்த லாக்கரை திறக்க முடியவில்லை என மாற்றுச் சாவி எக்ஸ்பெர்ட் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினார். வெளியே வந்த தனபாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது "பூட்டு திறப்பதற்காக என்னை அழைத்து வந்தார்கள். ஆனால் லாக்கரை திறக்க முடியவில்லை. அதற்கான சாவி என்னிடம் இல்லை. இரண்டு பீரோ மற்றும் ஒரு இரும்பு லாக்கர் உள்ளது. பீரோவை திறந்துள்ளோம். லாக்கரை திறக்க முடியவில்லை" எனக் கூறினார்.
அந்த லாக்கர் மட்டும்: லாக்கரை திறக்கமுடியாத நிலையில் பீரோ முழுவதும் அமலாக்கத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். திறக்கப்படாத அந்த லாக்கரில் முக்கிய ஆவணங்கள் இருக்கலாம் என அமலாக்கத்துறையினர் கருதுவதால், அடுத்தகட்டமாக என்ன செய்வது என அமலாக்கத்துறையினர் ஆலோசனையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, அமலாக்கத்துறை அதிகாரிகளின் அழைப்பின் பேரில், இந்தியன் வங்கி அதிகாரிகள், அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் வங்கியில் மேற்கொண்டுள்ள பணப் பரிவர்த்தனை தொடர்பாக ஆய்வு மேற்கொள்வதற்காக அவர் வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications