கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் அடுத்த நகர்வு- பிரேத பரிசோதனை ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது ஜிப்மர் குழு!
விழுப்புரம் : ஜிப்மர் மருத்துவக் குழுவினர் கள்ளக்குறிச்சி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்து, அறிக்கையை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி இரண்டு முறை பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை ஆய்வு செய்ய ஜிப்மர் மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாணவியின் உடற்கூராய்வு ஆய்வறிக்கையை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஜிப்மர் மருத்துவக்குழு தாக்கல் செய்தது.
சிதம்பரம் நடராஜர் கோவில் நகைகள் எவ்வளவு?..2வது நாளாக அதிகாரிகள் ஆய்வு - தீட்சிதர்கள் ஒத்துழைப்பு
கள்ளக்குறிச்சி மாணவி மரணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கணியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவி கடந்த ஜூலை 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர், உறவினர்கள் கூறிய நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. இதில் பள்ளி சூறையாடப்பட்டது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ரீ-போஸ்ட்மார்டம்
இந்நிலையில், மாணவியின் உடல், கடந்த மாதம் 14ஆம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, ஓய்வுபெற்ற தடயவியல் நிபுணர் மற்றும் அரசு மருத்துவர்கள் மூன்று பேர் கொண்ட குழு முன்னிலையில், கடந்த மாதம் 19ஆம் தேதி மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
ஜிப்மர் மருத்துவக் குழு
அதன் பின், மாணவியின் இரண்டு பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்ய, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தடயவியல் துறை பேராசிரியர் டாக்டர் குஷகுமார் சாஹா, தடயவியல் துறைத் தலைவர் டாக்டர் சித்தார்த் தாஸ், தடயவியல் துறை கூடுதல் பேராசிரியர் டாக்டர் அம்பிகா பிரசாத் பத்ரா ஆகியோர் அடங்கிய குழுவை நீதிமன்றம் நியமித்தது.
முழுமையாக ஆய்வு
உயர் நீதிமன்றத்தின் உத்தரவுபடி, புதுச்சேரி ஜிப்மர் குழுவினரிடம், மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி போலீசார் ஒப்படைத்தனர். ஜிப்மர் மருத்துவக் குழுவினர் கள்ளக்குறிச்சி மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை முழுமையாக ஆய்வு செய்தனர்.
நீதிமன்றத்தில் தாக்கல்
பின்னர், ஆய்வு அறிக்கையை விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில், நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் நேற்று தாக்கல் செய்தனர். இதற்கிடையே, உயிரிழந்த மாணவியின் தோழிகள் இருவர் நேற்று விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிபதி முன்னிலையில் ரகசிய வாக்குமூலம் அளித்தது குறிப்பிடத்தக்கது.