தளவானூர் தடுப்பணை உடைந்த விவகாரம்... தரமற்ற கட்டுமானத்திற்கு காரணமானவர்கள் தப்ப முடியாது -பொன்முடி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தளவானூர் அணை கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்குள் 2 முறை உடைந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி வசம் இருந்த பொதுப்பணித்துறையின் கீழ் கடந்த அதிமுக ஆட்சியில் தளவானூர் அணை கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தளவானூர் அணை உடைந்துள்ள நிலையில் அதனை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டு மாற்று ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளார்.

தளவானூர் அணை
விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைகளை ஒட்டி, தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25 கோடி திட்ட மதிப்பீட்டில் தளவானூர் தடுப்பணை கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. 400 மீட்டர் நீளமும் 3 மீட்டர் உயரமும் கொண்ட இந்த தடுப்பணையில் மூன்று மதகுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணையை கடந்த 2020 அக்டோபர் மாதம் அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.

2 முறை உடைப்பு
இந்நிலையில் இந்தாண்டு ஜனவரி மாதம் அணையில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தற்போதைய அமைச்சரும், திமுக துணைப் பொதுச்செயலாளருமான பொன்முடி பெரியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். மேலும், அதிமுக ஆட்சியின் கமிஷனால் கட்டுமானப் பணிகள் தரமற்ற நிலையில் இருப்பதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த நிகழ்வு நடந்து மிகச்சரியாக பத்தே மாதத்தில் மீண்டும் ஒருமுறை தளவானூர் அணை நேற்று உடைந்துள்ளது.

கட்டுமான தரம்
இதையடுத்து மாவட்ட ஆட்சியருடன் தளவானூர் அணையை நேரில் பார்வையிடச் சென்று அமைச்சர் பொன்முடி, தரமற்ற கட்டுமானப் பணிகளுக்கு துணை நின்றவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் அதிலிருந்து யாரும் தப்பிக்கவே முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதன் மூலம் கடந்த அதிமுக ஆட்சியில் இந்த அணையின் கட்டுமான தரத்தை ஆய்வு செய்த, கண்காணித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

சிறந்த உதாரணம்
70 ஆண்டுகள் பழமைவாய்ந்த சாலைகள், கட்டிடங்கள் எல்லாம் இன்னும் உறுதியாக இருக்கும் சூழலில், அணை கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்குள் இப்படி 2 முறை இடிந்து விழுவது கடந்த அதிமுக அரசின் லட்சணத்துக்கு சிறந்த உதாரணம் என அமைச்சர் பொன்முடி விமர்சித்தார். மேலும், தளவானூர் அணையை சீரமைக்கும் பணிகளை அரசு விரைவில் தொடங்கும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications