கான்ட்ராக்டரை வரச்சொல்லு! சும்மா வீட்டில் உட்காரக் கூடாது! நகராட்சி சேர்மனுக்கு டோஸ் விட்ட பொன்முடி!
விழுப்புரம்: 'வீட்டில் சும்மா உட்கார்ந்து இருக்கக்கூடாது குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை எல்லாம் நீங்க தான் கவனிக்க வேண்டும்' என விழுப்புரம் பெண் நகராட்சி சேர்மனுக்கு டோஸ் விட்டுள்ளார் அமைச்சர் பொன்முடி.
மேலும், பாதாள சாக்கடை ஒப்பந்தப் பணிகளை எடுத்த ஒப்பந்ததாரர் பல மாதங்களாக பணிகளை முடிக்கவில்லை என பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்து, யாரு கான்ட்ராக்டர், என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க என நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
மேலும், ''ஏம்மா இதெல்லாம் குறை இருக்குனு ஏன் முன்னாடியே வந்து சொல்லவில்லை'' என சிரித்தபடி உரிமையாக அமைச்சர் பொன்முடி கேட்க, அதற்கு பதிலளித்த பெண்கள் ''உங்களைத் தான் பார்க்கவே முடியவில்லையே'' என பதில் கொடுத்தனர்.

தொடர் மழை
விழுப்புரத்தில் பெய்து வரும் தொடர் மழைக்கு இடையே வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கையில் குடையுடன் ஆய்வில் இறங்கிய அமைச்சர் பொன்முடி, நகராட்சி அதிகாரிகளை வறுத்தெடுத்துவிட்டார். மழை பெய்தால் பாதிப்பு வரும் என்று முன்கூட்டியே தாம் எச்சரித்தும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என அதிகாரிகளை கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தார். இதனால் ஜில்லென்ற வானிலைக்கு மத்தியிலும் அதிகாரிகளுக்கு வியர்த்துக் கொட்டத் தொடங்கியது.

நகராட்சி சேர்மன்
குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கு எல்லாம் எம்.எல்.ஏ.வோ, எம்.பி.யோ வர முடியாது என்றும் நீங்க தான் இதையெல்லாம் கவனித்துக் கொள்ள வேண்டும் எனவும் விழுப்புரம் பெண் நகர்மன்றத் தலைவருக்கு பாடம் எடுத்தார். மேலும், சும்மா வீட்டில் உட்கார்ந்து இருக்கக் கூடாது என எல்லோர் முன்னிலையிலும் அந்த நகர்மன்ற தலைவிக்கு டோஸ் விழுந்தது. அடுத்தது, யாருப்பா இந்த ஏரியா கவுன்சிலர் என அமைச்சர் பொன்முடி அழைக்க, நான் தாங்க என பெண் கவுன்சிலர் கூட்டத்தில் எட்டிப்பார்த்தார்.

கொஞ்சம் பார்த்துகங்க
பெண் கவுன்சிலர் என்பதால் தனது கோபத்தை அப்படியே அடக்கிக் கொண்ட அமைச்சர் பொன்முடி, கொஞ்சம் இதையெல்லாம் பார்த்துகங்கமா என்பதோடு முடித்துக் கொண்டார். இதனிடையே பாதாள சாக்கடை திட்டப் பணிகளை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் யார் என்று நகராட்சி ஆணையரிடம் வினவிய அமைச்சர் பொன்முடி, அவரை வந்து என்னை பார்க்கச் சொல்லுங்க என ஆர்டர் போட்டுவிட்டு புறப்பட்டார்.

உரிமையுடன் கேள்வி
இதில் ஹைலைட் என்னவென்றால் உரிமையாக பேசுவதாக நினைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே, ''ஏம்மா இதெல்லாம் குறை இருக்குனு ஏன் முன்னாடியே வந்து சொல்லவில்லை, நாங்க வந்தால் தான் சொல்வீர்களோ'' என சிஅமைச்சர் பொன்முடி கேட்க, அதற்கு பதிலளித்த பெண்கள் ''உங்களைத் தான் பார்க்கவே முடியவில்லையே'' என பதில் கொடுத்தனர். இதனைக் கேட்ட அதிகாரிகள் வெளியே சிரிக்காவிட்டாலும் கூட உள்ளூர சிரிப்பை அடக்க முடியாமல் நின்றனர்.












Click it and Unblock the Notifications