"தமிழ்நாட்டில் 4 பாஜக எம்எல்ஏக்கள் இருப்பதே அதிமுக போட்ட பிச்சை!" சிவி சண்முகம் தடாலடி பேச்சு
விழுப்புரம்: அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் மத்திய பாஜக அரசை மிக கடுமையாக விமர்சித்துப் பேசினார். தமிழகத்தில் பாஜக வளரவே இல்லை என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.
விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் பாக்கியராஜ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பாக்கிராஜ் வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் சிவி.சண்முகம் எம்பி மத்திய பாஜக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார். பாஜக அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை உடன் தான் கூட்டணி வைத்துக் கொண்டு மிரட்டி வசூலிப்பதாகச் சாடினார்.
சி.வி. சண்முகம்: இந்தக் கூட்டத்தில் பேசிய சி.வி. சண்முகம், "பாஜக அரசு மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசாக இருக்கிறது. மதத்தின் பெயரால் நாட்டில் பிரிவினைவாதத்தை பாஜக உருவாக்கி வருகிறது. நாடு இன்று ஒரு அபாயகரமான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டு இருக்கிறது என்பதே உண்மை. அண்ணாமலை இங்கே மீண்டும் மோடி மீண்டும் மோடி என்கிறார். ஆனால், மக்கள் வேண்டாம் மோடி வேண்டாம் மோடி வேண்டாம் மோடி என்கிறோம்.
போதும்டா சாமி.. நீ ஆண்ட 10 ஆண்டுகளே போதும்டா சாமி என்கிறோம். நீங்கள் ஆண்டதும் போதும்.. மக்கள் கஷ்டப்பட்டதும் போதும். இன்னொரு முறை மோடியும் பாஜகவும் வந்தால் அது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய ஆபத்தாக அமையும். நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய ஆபத்து ஏற்படும் என்பதை நாம் உணர வேண்டும். இப்போதே யாராலும் எந்தத் தொழிலும் செய்ய முடிவதில்லை.
உத்தம காந்திகளா: யாராவது பாஜகவை எதிர்த்தால் அவர்கள் மீது அமலாக்கத் துறை, சிபிஐ, ஐடி நடவடிக்கைகள் பாய்கிறது. பாஜகவின் கூட்டணிக் கட்சிகளைப் போல அமலாக்கத் துறை, சிபிஐ, ஐடி அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். எதிர்த்துச் செயல்பட்டாலே நடவடிக்கை என்கிறார்கள். பாஜகவில் இருப்பவர்கள் எல்லாம் என்ன உத்தம காந்திகளா..
அதிமுக போட்ட பிச்சை: இன்று பாஜக தமிழ்நாட்டில் ஆட்சிக்குக் கூட வரவில்லை. நமது தயவால் நான் எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் 4 பாஜக எம்எல்ஏக்கள் இருப்பது அதிமுக போட்ட பிச்சை. ஆனால், இப்போது அதற்குள் என்ன செய்தி வருகிறது எனப் பாருங்கள். எல்லா நிறுவனங்களையும் மிரட்டி அச்சுறுத்தி பாஜக வசூலித்து வருகிறதாம்.
விழுப்புரத்தில் கூட அண்ணாமலை வருகிறார் என்பதற்காக மிரட்டி வசூலித்தார்களே.. ஒரு கடையைக் கூட விடவில்லை. அனைவரிடமும் மிரட்டி வசூல் செய்தார்கள்" என்று அவர் சரமாரியாகச் சாடினார்.
அதிமுகவும் பாஜகவும் கடந்த சில ஆண்டுகள் கூட்டணியில் இணைந்து பயணித்த நிலையில், சமீபத்தில் தான் இரு கட்சிகளுக்கும் இடையேயான கூட்டணி முறிந்து போனது. இந்த முறை இருவரும் தனித்தனியாகவே களமிறங்குகிறார்கள். இருப்பினும், இரு தரப்பிற்கும் இடையே மறைமுக கூட்டணி இருப்பதாகவும் இதன் காரணமாகவே அதிமுக தலைவர்கள் பாஜகவை விமர்சிப்பது இல்லை என்றும் திமுக தரப்பு கூறி வருகிறது. அதற்குப் பதிலடி தரும் விதமாகவே சி.வி.சண்முகம் இப்படி பேசியதாகத் தெரிகிறது.
விழுப்புரம் தொகுதியைப் பொறுத்தவரைக் கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட விசிக ரவிக்குமார் சுமார் 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த முறை மீண்டும் அவரே களமிறங்கும் நிலையில், அதிமுக சார்பில் பாக்கியராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக சார்பில் முரளி சங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications