ராமதாஸ் Vs அன்புமணி.. இருவரும் அரசியல் புரியாதவர்கள் அல்ல.. இணைந்து செயல்பட வேண்டும் - ஜிகே மணி
விழுப்புரம்: எல்லோரும் பேசுவதை விட ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்து செல்வதுதான் கட்சிக்கு பலமாக இருக்கும். இருவரும் அரசியல் புரியாதவர்கள் அல்ல. இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களின் ஆசை என்று பாமக கெளரவத் தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் மகளின் மகன் முகுந்தன் மாநில இளைஞரணி தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்தே ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் மோதல் தொடங்கிவிட்டது. பாமகவில் உள்கட்சி பிரச்னை சமீபகாலமாக பூதாகரமாகி வருகிறது. தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு பொது வெளியிலேயே அம்பலமாகிவிட்டது. இந்நிலையில், பொது வெளியிலேயே நேற்று அன்புமணி ராமதாஸ் மன்னிப்பு கேட்டிருந்தார்.

என் மீது ஐயா ராமதாஸுக்கு கோபம் இருந்தால் மன்னித்து விடுங்கள் என பாமக பொதுக் குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உருக்கமாக பேசியிருந்தார். மேலும் ராமதாஸ் டென்ஷன் ஆக வேண்டாம். என்ன செய்ய வேண்டுமோ அதை சொல்லுங்கள், மகனாக, கட்சியின் தலைவராக நான் செய்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எல்லோரும் பேசுவதை விட ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்து செல்வதுதான் கட்சிக்கு பலமாக இருக்கும். இருவரும் அரசியல் புரியாதவர்கள் அல்ல. இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களின் ஆசை என்று பாமக கெளரவத் தலைவர் ஜிகே மணி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை சந்திப்பதற்காக பாமக கெளரவத் தலைவர் ஜிகே மணி வருகை புரிந்தார். அதைத்தொடரந்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது: "ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. அன்புமணி ராமதாஸ் நேற்று சொல்லியிருக்கிறார். அதனை நாங்கள் மறுக்கவில்லை. இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்துச் சென்றால் நன்றாக இருக்கும். அதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அந்த சூழ்நிலை விரைவில் உருவாகும் என நினைக்கிறோம்.
இருவரும் சேர்ந்து பேசி தீர்வு கண்டால் கட்சிக்கு பலமாக இருக்கும். கட்சியின் வளர்ச்சிக்கும், தேர்தலை சந்திப்பதற்கும், கட்சியினருக்கும் உள்ள மன உளைச்சல்களுக்கு நல்ல தீர்வாக அமையும். அதை தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதை தான் தினந்தோறும் பேசி வலியுறுத்தி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறோம்.
பொதுவெளியில் அன்புமணி மன்னிப்பு கேட்டது குறித்து கேட்ட கேள்விக்கு, இதற்கு மேல் நான் எதுவும் பேசக்கூடாது. இருவரும் பேசி அடுத்த கட்டத்துக்கு சென்றால் பலமாக இருக்கும். எங்கள் மன உளைச்சலுக்கு ஒரு தீர்வாக இருக்கும். நாங்களும் பேசி சுமூக தீர்வு ஏற்படும் என சொல்லி இருக்கிறோம். ஆனால் சுமூகத் தீர்வு எட்டவில்லை. எல்லோரும் பேசுவதை விட இருவரும் சேர்ந்து பேசி நல்ல முடிவு எடுப்பது தான் நல்லது. அவர்கள் அரசியல் விவரம் புரியாதவர்கள் அல்ல. இருவரும் சேர்ந்து பேசி முடிவெடுப்பது தான் நல்லது என்றார்.












Click it and Unblock the Notifications