அதானி எனக்கு மாமனா மச்சானா? செந்தில் பாலாஜி இப்போ தியாகியா! அடுக்கடுக்காய் கேட்கும் அன்புமணி ராமதாஸ்
விழுப்புரம்: ஆறாண்டுகளுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த நிலையில், தற்போது அவர் தியாகியாக மாறிவிட்டாரா? என கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அதானி உடனான சந்திப்பு குறித்து முதல்வர் இதுவரை பதிலளிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்," அதானி தொடர்பான பிரச்சனை காரணமாக தமிழ்நாட்டில் அமைதி நிலவுகிறது. இதுகுறித்து நாங்கள் மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய பிரச்சனை இதுகுறித்து அறிக்கைகள் பேட்டிகள் கொடுத்திருக்கிறோம்.

அரசிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை. நியூயார்க் நகரத்தில் தமிழ்நாடு மின்சாரத் துறை மீது ஊழல் செய்திருப்பதாக வழக்கு பதிவு செய்துள்ளார்கள். அதனியை சந்தித்தது குறித்து முதலமைச்சர் பதில் சொல்லவே இல்லை. இது தொடர்பாக திமுக கூட்டணி கட்சியினரும் வாயை திறக்கவில்லை.
செல்வப் பெருந்தகை ஏன் ஹிண்டன்பர்க், அதானி பற்றி பேசவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார் . எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. எனக்கும் தமிழ்நாடு மின்சார துறைக்கும் சம்பந்தம் இருக்கிறது, ஏனென்றால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நான் மின்சார கட்டணம் செலுத்துகிறேன். இரண்டு ஆண்டு காலத்தில் நான் 28% அதிகமாக மின் கட்டணம் கட்டிக் கொண்டிருக்கிறேன்.
இவர்கள் செய்த ஊழல் காரணமாக நான் அதிகமாக கட்டிக் கொண்டிருக்கிறேன். என்னை போல் தமிழ்நாட்டில் இரண்டு கோடி குடும்பம் அதிகமாக கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதானி எனக்கு மாமனா மச்சானா? அதானியை விசாரணை நடத்துங்கள் அதில் மாற்றுக்கருத்து கிடையாது. தமிழ்நாடு மின்சார வாரியம் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டிருக்கிறது என அமெரிக்கா நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறது என்றால்? இது சம்பந்தமாக தமிழ்நாட்டில் பேசுவதற்கு ஆளே கிடையாதா?
கூட்டணி கட்சிகளுக்கு நாக்கு இல்லையா? வைகோ மீது நான் அதிக அளவு மரியாதை வைத்திருக்கிறேன். முதலமைச்சர் மூத்த அரசியல் தலைவரை இழிவுபடுத்தியிருக்கிறார். அதுகுறித்து வைகோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதானி மோடி என பேசிக் கொண்டிருக்கிறார். அதானி மற்றும் ஸ்டாலின் ரகசிய சந்திப்பு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு x தளத்தில் அதானியை ரகசியமாக ஸ்டாலின் சந்தித்தது இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது.
இவ்வளவு பெரிய ட்ரெண்டிங் நடந்தபோது ஊடகத்தில் ஒரு சின்ன செய்தி கூட வரவில்லை. இவ்ளோ பெரிய ஊழல் குற்றச்சாட்டு இருக்கிறது ஏன் எதிர்க்கட்சித் தலைவர் அதை குறித்து பேசவில்லை. இதுகுறித்து யாரும் ஏன் பேசவில்லை? நாங்கள் மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இதனால் 2 கோடி குடும்பம் பாதிப்படைந்துள்ளது. இதனால் மின்சாரத்துறை தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையில் மக்களுக்கு நேரடி தொடர்புள்ளது. ஆனால் யாரும் அதானி பற்றி பேச மாட்டார்கள். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
செந்தில் பாலாஜி பிணையில் வெளியே வந்த அடுத்த நாள் அவர் அமைச்சராக ஆனது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்ததாக நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள். இது ஜனநாயகம் கிடையாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள். செந்தில் பாலாஜியை சுதந்திர போராட்ட தியாகி போல் முதலமைச்சர் நடத்திக் கொண்டிருக்கிறார். என்ன ஆட்சி நடக்கிறது? இதே முதலமைச்சர் ஆறாண்டுகளுக்கு முன்புதான் செந்தில் பாலாஜி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவர் தியாகியாக மாறிவிட்டாரா?" என கூறினார்.












Click it and Unblock the Notifications