பாமக பொருளாளர் திலகபாமா பதவி பறிப்பு.. புதிய அட்டாக்கை தொடங்கிய ராமதாஸ்.. பதிலடி கொடுத்த அன்புமணி!
விழுப்புரம்: சென்னையில் பாமக மாவட்டச் செயலாளர் கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்தி வரும் நிலையில், இன்னொரு பக்கம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமகவின் பொருளாளர் திலகபாமாவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். அந்த பதவிக்கு சையது மன்சூர் என்பதை நியமனம் செய்துள்ளார். இந்த நிலையில், ராமதாஸ் நியமனத்திற்கு எதிராக அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் உச்சக்கட்ட மோதல் வெடித்துள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்று கால்களை பிடித்து அன்புமணியும், செளமியாவும் கதறி அழுதார்கள். எனக்கு தெரியாமலேயே பாஜக உடன் கூட்டணி அமைக்க செளமியா பணிகளை செய்தார்.

ராமதாஸ் குற்றச்சாட்டுகள்
தனது தாயையே பாட்டிலால் அடிக்க சென்றவர் அன்புமணி. அவருக்கு கொஞ்சம் கூட தலைமைப் பண்பே இல்லை. நான் செய்த சத்தியத்தையும் மீறி அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கியதே தவறு. சீனியர்கள், நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் கொஞ்சம் கூட மதிப்பு அளிப்பதில்லை என்று குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
திலகபாமா நீக்கம்
இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை சோழிங்கநல்லூரில் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் திலகபாமா பங்கேற்றிருந்தார். அவருக்கு அன்புமணிக்கு அருகே இருக்கை போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாமக பொருளாளார் பதவியில் இருந்து திலகபாமா நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார்.
ராமதாஸ் அறிவிப்பு
அவருக்கு பதிலாக பாமக துணைத் தலைவராக செயல்பட்டு வந்த சையது மன்சூர் என்பதை பொருளாளராக நியமனம் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து சையது மன்சூர் பேசுகையில், ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை கட்சியின் பதவிகள் மாற்றி அமைக்கப்படும். அந்த விதிகளின் அடிப்படையிலே எனக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாமக பதவி நியமனங்கள் ராமதாஸால் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
அன்புமணி பதிலடி
இந்த நிலையில் ராமதாஸ் நியமனத்திற்கு எதிரான அன்புமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமா அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது. பாமகவின் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிக்கும் நிர்வாகிகள்
இதனால் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தந்தை மற்றும் மகன் இடையிலான மோதல் காரணமாக பாமக கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் தவித்து வருகிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications