பொன்முடி vs செஞ்சி மஸ்தான்.. விழுப்புரத்தில் பொது நிகழ்ச்சியில் வெடித்த மோதல்.. ஆவேசமான தொண்டர்!
விழுப்புரம்: விழுப்புரத்தில் திமுகவில் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் இடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அதைப் பொதுவெளியில் வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. செஞ்சி மஸ்தான் மீது திமுக நிர்வாகி ஒருவர் இது தொடர்பாகக் குற்றஞ்சாட்டிய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
திமுகவில் ஒரு சில மாவட்டங்களில் உள்ள இரு தலைவர்களுக்கும் இடையே அதிகார மோதல் நிலவி வருகிறது. பெரும்பாலும் இந்த மோதல்கள் எல்லாம் திரைமறைவில் தான் நடக்கும்.

அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடி மற்றும் முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. இருவருக்கும் இடையேயான அதிகார மோதல் பல மாதங்களாகவே நீடிக்கிறது. அது நேற்று மீண்டும் வெடித்துள்ளது.
அணை திறப்பு விழாவில் பொன்முடி
அதாவது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வீடுர் அணை நீர் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் பங்கேற்றனர். அடுத்த 4 மாதங்களுக்கு வீடூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக 328 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பொன்முடி, முன்னாள் அமைச்சரும் திமுக வடக்கு மாவட்டச் செயலாளருமான செஞ்சி மஸ்தான் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலர் பங்கேற்று, வீடூர் அணையில் இருந்து விவசாய பாசனத்திற்காக நீரைத் திறந்து வைத்தனர். நிகழ்ச்சி ஆரம்பித்து முடியும் வரை அனைத்து ஸ்மூத்தாகவே சென்று கொண்டு இருந்தது.
ஆவேசமான திமுக தொண்டர்
ஆனால் நிகழ்ச்சி முடியும் நேரம் பார்த்து திடீரென திமுக நிர்வாகி மலர் மன்னன் அங்கு ஆவேசமாகக் கத்த தொடங்கினார். அதாவது அமைச்சர் பொன்முடியை வரவேற்கும் வகையில் திமுகவினர் யாரும் திமுக கொடி கட்டக்கூடாது எனச் செஞ்சி மஸ்தான் தடுத்து விட்டதாகச் சொல்லி அவர் கூச்சலிட்டார். அதுவும் பொன்முடி முன்னிலையிலேயே இதுபோல அவர் கூச்சலிட்டார். இதனால் சற்று நேரம் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.
செஞ்சி மஸ்தான்
முன்னதாக நீர் திறப்பு விழா குறித்து தனக்கு முறையாகத் தகவல் தெரிவிக்கப்படவில்லை எனச் சொல்லி செஞ்சி மஸ்தான் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கடிந்து கொண்டு இருந்தார். அதன் பிறகே பொன்முடி வந்து நிகழ்ச்சி நடந்தது. இந்தச் சூழலில் தான் நிகழ்ச்சி முடியும் போது திமுக நிர்வாகி செஞ்சி மஸ்தானை சாடி ஆவேசமாகக் குற்றஞ்சாட்டினார்.
முதல்முறை இல்லை
அதேநேரம் பொன்முடிக்கும் செஞ்சி மஸ்தானுக்கும் இடையேயான மோதல் பொதுவெளியில் வெடிப்பது இது முதல்முறை இல்லை. கடந்தாண்டு ரமலான் மாதத்தில் இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்ச்சி நடந்த போது, மேடையிலேயே இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதைத் தொடர்ந்தே சில மாதங்களில் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் அமைச்சர் பதவியில் இருந்தும் செஞ்சி மஸ்தான் நீக்கப்பட்டார்.
மேலும், விழுப்புரம் மாவட்டத்திற்குப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்ட போது பொன்முடி மகன் கவுதம சிகாமணிக்கு பதவி வழங்கப்பட்டது. இது செஞ்சி மஸ்தானுக்கு அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், மாவட்ட பொறுப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட போது மீண்டும் அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications