சீமான் திடீர் பல்டி! ராஜீவ் காந்தியை அவதூறாக பேசவே இல்லை.. விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் பரபரப்பு!
விழுப்புரம்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாம் ஒருபோதும் அவதூறாக பேசவே இல்லை என்று விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சீமான் மீதான ராஜீவ் காந்தியை அவதூறாக பேசிய இந்த வழக்கின் விசாரணை மார்ச் 26-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார். அந்த பிரசாரக் கூட்டத்தில் சீமான் பேசியதாவது: ஒரு காலம் வரும்..வரலாறு திருப்பி எழுதப்படும். என் இனத்தை இந்திய ராணுவம் என்கிற அமைதிப்படை, அநியாயப்படையை அனுப்பி என் இன மக்களைக் கொன்று குவித்த ராஜீவ் காந்தி என்கிற என் இனத்தின் எதிரியை தமிழர் தாய் நிலத்திலே கொன்று புதைத்தோம் என்று வரலாறு எழுதும். இவ்வாறு சீமான் பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராக சீமானுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
ஆனாம் விக்கிரவாண்டி நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும் தம் மீதான வழக்கை ரத்து செய்யவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்தது. அத்துடன் மனுவை டிஸ்மிஸ் செய்த நீதிபதி வேல்முருகன் சீமானுக்கு எதிராக காட்டமான கருத்துகளையும் தெரிவித்தார். அப்போது, சீமான் அரசியல் தலைவர்கள் குறித்து பேசும் போது நிதானமாக பேச வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்குகளை எதிர்கொண்டால்தான் இப்படி பேசுவதை சீமான் நிறுத்தவும் செய்வார். கடந்த 6 மாதங்களாக சீமான் பேச்சுகள் அனைத்தும் தலைவர்களை தாக்குவதாகவே இருக்கிறது; தனி நபர்களை தூண்டிவிடும் வகையில் சீமான் பேசிவருகிறார்; நீதிமன்ற படிகளேறினால்தான் நிதானமாக பேசுவார் சீமான் என காட்டமாக தெரிவித்திருந்தார் நீதிபதி வேல்முருகன்.
இதனைத் தொடர்ந்து விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நேற்று சீமான் ஆஜரானார். இந்த வழக்கின் விசாரணையின் போது, ராஜீவ் காந்தியை அவதூறாக பேசினீர்களா? என நீதிபதி கேட்ட போது, தாம் அப்படிப் பேசவே இல்லை என அந்தர்பல்டி அடித்தார் சீமான். இதனையடுத்து பிற்பகலிலும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் முடிவில் சீமான் மீதான இந்த வழக்கு மார்ச் 26-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications