விழுப்புரம் அருகே அதிர்ச்சி சம்பவம்.. நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை.. பெரும் சோகம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அருகே நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது ஆண்டாக வீட்டிலிருந்தே நீட் தேர்வுக்கான பயிற்சி மேற்கொண்டு வந்த மாணவி, திடீரென உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நீட் தேர்வு அச்சம் காரணமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அருகே தாராபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி கிருஷ்ணவேனி. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள். இதில் இரண்டாவது மகள் இந்துமதி (வயது 19), கடந்த 2022 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு முடித்தார்.

அரசு பள்ளியில் படித்த இந்துமதி, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 520 மார்க் எடுத்தார். ஆனால் அவருக்கு அரசு கல்லூரியில் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் அவர் நீட் தேர்வுக்கு படித்து வந்தார். ஆனால் கடந்த ஆண்டு நடந்து முடிந்த அந்த தேர்வில் இந்துமதியால் 350 மதிப்பெண்கள் எடுக்க முடிந்துள்ளது. ஆனால் அப்போதும் அவருக்கு மருத்துவ சீட் கிடைக்கவில்லை.
இதையடுத்து தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நீட் தேர்வுக்கு இந்துமதி படித்து வந்தார். வரும் மே மாதம் தேர்வு நடக்க இருந்த நிலையில், அதற்கு விண்ணப்பிக்க வரும் 7 ஆம் தேதி கடைசி நாள். எனவே நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மாணவி ஓபிசி சான்றிதழ் வாங்கி வருமாறு தந்தையிடம் கூறியிருந்தார். நேற்று அவர் ஓபிசி சான்றிதழை மாணவியிடம் கொடுத்துவிட்டு வயல் வேலைகளுக்காக வெளியில் சென்றார்.
அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவி இந்துமதி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மாலையில் வீடு திரும்பிய பெற்றோர், மகள் தூக்கில் பிணமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நீட் தேர்வு அச்சத்தால் மகள் உயிரிழந்துவிட்டதாக அவரது தந்தை கதறி அழுதார். மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தற்கொலை தீர்வல்ல
தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.












Click it and Unblock the Notifications