விஜய் சொன்னாலும் கேட்க முடியாது.. காலையிலேயே தவெக தொண்டர்கள் அலப்பறை.. உடைக்கப்பட்ட இருக்கைகள்
விழுப்புரம்: விக்கிரவாண்டியில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநில மாநாட்டுக்கு தொண்டர்கள் குவிந்து வரும் நிலையில் தலைவர் விஜய் சொல்வதையெல்லாம் பின்பற்ற முடியாது என்று காலையிலேயே தொண்டர்கள் செய்த அலப்பறையால் இருக்கைகள் உடைந்து நொறுங்கின.
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு என்பது விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் இன்று நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு நடிகர் விஜய் மாநாட்டு மேடைக்கு வருகிறார். அதன்பிறகு 100 அடி உயர கொடிக்கம்பத்தில் நடிகர் விஜய் ரிமோட் மூலம் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.

மாலை 4 மணிக்கு தொடங்கும் மாநாடு இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. மாலை 6 மணியளவில் நடிகர் விஜய் மாநாட்டில் பேசி கட்சி கொள்கைகளை அறிவிக்க உள்ளார். நடிகர் விஜயின் இந்த முதல் அரசியல் மாநாடு தமிழகத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் என்ன பேச போகிறார் என்பதை பலரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இதற்கிடையே தான் தொண்டர்கள் நேற்று இரவு முதலே மாநாடு நடக்கும் இடத்துக்கு குவிந்து வருகின்றனர். இன்று காலையில் அதிகமான வாகனங்களில் தொண்டர்கள் படையெடுத்துள்ளனர். கழுத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டு, கை மற்றம் வாகனங்களில் விஜய் கட்சியின் கொடியை வைத்துக்கொண்டு தொண்டர்கள் உற்சாகமாக விக்கிரவாண்டி நோக்கி செல்கின்றனர்.
காலை 10 மணிக்கு மேல் தான் தொண்டர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதற்கு முன்பாக யாருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று இரவே ஏராளமான தொண்டர்கள் மாநாடு நடக்கும் இடத்தில் குவிந்தனர். அதேபோல் இன்று அதிகாலை முதல் ஏராளமான வாகனங்களில் சாரைசாரையாக தொண்டர்கள் மாநாடு நடக்கும் இடத்துக்கு படையெடுத்தனர். கூட்டம் தொடர்ந்து அதிகரித்ததால் காலை 7 மணிக்கே தொண்டர்கள் மாநாடு நடக்கும் இடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த வேளையில் ஆர்வ மிகுதியில் தொண்டர்கள் தடுப்புகள் மீறி ஏறி குதித்து இடம்பிடிக்க ஓடினர். அப்போது அங்கு போடப்பட்டு இருந்த இருக்கைகள் உடைந்தன. அதுமட்டுமின்றி விஐபிக்கள், பத்திரிகையாளர்கள், மகளிருக்கு என ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் ஆண் தொண்டர்கள் போய் அமர்ந்து அலப்பறையை தொடங்கி உள்ளனர். இதன்மூலம் நடிகர் விஜய் கூறிய அறிவுறுத்தல்களை தொண்டர்கள் யாரும் கடைப்பிடிக்கவில்லை.
அதாவது முன்னதாக நடிகர் விஜய் மாநாட்டுக்கு வரும்படி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்து அறிக்கை வெளியிட்டார். அப்போது அவர் பாதுகாப்பாகவும், கட்டுக்கோப்பாகவும் மாநாட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். ஆனால் மாநாடு தொடங்குவதற்கு முன்பாகவே தவெக தொண்டர்கள் விஜயின் சொல்லை மீறி உள்ளனர்.












Click it and Unblock the Notifications