10 பேரின் உயிரை பறித்த விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து.. ஃபோர்மேன் கைது
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 4 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர். இந்த நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஃபோர்மேன் சுரேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே குண்டாயிருப்பு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் அந்த கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள 50க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

பட்டாசு ஆலையில் 10க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. ஒவ்வொறு அறையிலும் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருந்தனர். நேற்றும் வழக்கம்போல் 30 க்கும் மேற்பட்டோர் அந்த பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வந்தனர். அப்போது எதிர்பராத விதமாக மதியம் 12 மணியளவில் பட்டாசு ஆலையின் ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் அந்த அறையில் தீ பற்றி எரிந்ததுடன் அடுத்தடுத்து மற்ற அறைகளுக்கும் தீ பரவியது. இதில் ஏற்பட்ட தீ விபத்தில் அடுத்தடுத்து அறைகள் இடிந்து விழுந்தன. இதில் தீ விபத்து மற்றும் இடிபாடுகளில் சிக்கி ஊழியர்கள் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தில் 4 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர். மேலும் 8 பேர் படுகாயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில், ஒரு அறையில் மணி மருந்து எனப்படும் ரசாயன மூலப்பொருள் கலக்கும் போது தான் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் பலரும் 90 சதவிகித காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையே பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக அந்த ஆலையின் உரிமையாளர் விக்னேஷ், மேலாள ஜெயபால், ஃபோர்மேன் சுரேஷ் குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அந்த ஆலையின் ஃபோர்மேன் சுரேஷ் குமார் (வயது 30) கைது செய்யப்பட்டார். போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 3 லட்சமும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சமும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். இதேபோல், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications