சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பெண்கள் உடல் கருகி பலி - முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
விருதுநகர்: சிவகாசி அருகே மண்குண்டாம்பட்டி உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தாயில்பட்டியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தாயில்பட்டியை அடுத்த மண்குண்டாம்பட்டியில் RSR என்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் மத்தாப்பு மற்றும் ரோல் கேப், பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 100க்கு மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இன்று வழக்கம் போல் ரோல் கேப் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபொழுது மருந்துகளில் ஏற்பட்ட ஊராய்வு காரணமாக திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் தாயில்பட்டியைச் சேர்ந்த பானு என்ற பாலசரஸ்வதி, விஸ்வநத்தத்தை சேர்ந்த முருகேஸ்வரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
வெடி விபத்து குறித்து தகவலறிந்த வெம்பக்கோட்டை, சிவகாசி, சாத்தூர் பகுதியை சேர்ந்த தீயணைப்பு துறையினர் 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வெம்பக்கோட்டை காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பிவைத்தனர். வெம்பக்கோட்டை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டாசு வெடி விபத்து ஏற்பட்ட ஆலையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மற்றும் சாத்தூர் எம்எல்ஏ எ ஆர் ஆர் ரகுராமன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications