சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து.. 2 பெண்கள் பலி.. ஆலை உரிமையாளர் தலைமறைவு.. போர்மேன் கைது
விருதுநகர்: சிவகாசி அருகே மண்குண்டாம்பட்டியில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் இரண்டு பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் போர்மேன் கண்ணன் என்பவரை கைது செய்துள்ளனர். தலைமறைவான ஆலை உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியை அடுத்த மண்குண்டாம்பட்டியில் ஆர்.எஸ்.ஆர் எனும் பெயரில் பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. நாக்பூர் உரிமம் பெற்று இயங்கிவரும் இந்த பட்டாசு ஆலையில் மத்தாப்பு மற்றும் ரோல் கேப் உள்ளிட்ட பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று வழக்கம்போல் ரோல் கேப் வெடி தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

பட்டாசு ஆலையில் ஒரு அறையில் உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அறை தரைமட்டமானது அதில் வேலை செய்து வந்த பானு என்ற பாலசரஸ்வதி 39, மற்றும் விஸ்வநத்தத்தைச் சேர்ந்த முருகலட்சுமி ஆகிய இரு பெண் தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த உடன் வெம்பக்கோட்டை, சிவகாசி, சாத்தூர் பகுதி தீயணைப்புத்துறையினர் நான்கு தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வெம்பக்கோட்டை காவல்நிலைய போலீஸார், உயிரிழந்த இரு பெண்களின் உடல்களையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்தான புகாரின் பேரில் வெம்பக்கோட்டை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த ஆலை உரிமையாளர் தலைமறைவானார். ஆலையில் இருந்த போர்மேன் கண்ணன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications