ரத்தமாய் மாறிய தண்ணீர் தொட்டி.. பிரிந்து சென்ற மனைவி.. அண்ணனை கொடூரமாக வெட்டி கொன்ற தம்பி
விருதுநகர்: விருதுநகர் அருகே பசுமை நிறைந்த அமைதியான கிராமம் அண்மையில் அழுகுரல் நிரம்பி காணப்பட்டது. கிராமத்திற்கு நடுவில் இருந்த தோட்டத்தில் ஒன்று கூடி நிற்க, காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்தது. அங்கு தொட்டியில் இருந்த தண்ணீர் முழுவதும் சிவப்பு நிறமாக காணப்பட்டது. அதன் அருகில் ஒரு ஆண் சடலமும் கிடந்தது.
நடந்தது கொலை என்பது பார்த்தவுடன் போலீசாருக்கு தெரிந்துவிட்டது. அங்கு கண்ணீரில் கதறி கொண்டிருந்த குடும்பத்தினரிடம் விருதுநகர் சூலக்கரை போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இனாம் ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்த மகேந்திரன்( வயது 40). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகேந்திரன் தன்னுடைய ஆறு ஏக்கர் நிலத்தில் வாழை, நெற்பயிர் பயிரிட்டு வந்தார்.
அதே ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன், இவர் மகேந்திரனின் பெரியப்பா மகன் ஆவார். மாரியப்பனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு காரணமாக மாரியப்பனை அவரது மனைவியை பிரிந்துவிட்டார். இந்த பிரிவுக்கு மகேந்திரனே காரணம் என்று மாரியப்பன் குற்றம்சாட்டி வந்துள்ளார்.
இந்தசூழலில் அண்ணன் தம்பி உறவுகளான இவர்களுக்கு இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்வதற்காக அங்குள்ள பொது கிணற்றில் மகேந்திரன் குளிக்க சென்றிருக்கிறார்.
அப்போது அங்கு வந்த மாரியப்பன் மகேந்திரனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது முற்றியதால் ஆத்திரம் அடைந்த மாரியப்பன், பெரியப்பா மகனான தனது அண்ணன் மகேந்திரனை அரிவாளால் சரமாரியாக வெட்டியிருக்கிறார்.
முகம் மற்றும் கை, கால்களில் கொடூரமாக மகேந்திரன் வெட்ப்பபட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார். இந்த விவகாரம் தான் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து விருதுநகர் சூலக்கரை போலீசார் மகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப்பதிவு செய்து மாரியப்பனை தேடிய போது தான் அவர் தலைமறைவானது தெரியவந்தது.
உடனே அவரை வலைவீசி பிடித்து விசாரித்தனர். அப்போது தான் மாரியப்பன் மகேந்திரனுக்கு எப்படி எமனாக மாறினார் என்பது தெரியவந்தது. கடந்த 2016ம் ஆண்டு மாரியப்பனுக்கும்,மகேந்திரனின் அக்காள் மகனுக்கும் திருமணம் நடந்தது. அந்த திருமணத்தை தாய் மாமன் என்ற முறையில் மகேந்திரன் தான் நடத்தி வைத்திருக்கிறார். தற்போது மாரியப்பனுக்கு ஐந்து வயதில் மகன் உள்ளார். மகன் பிறந்ததில் இருந்து மாரியப்பனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.
கணவருடன் அடிக்கடி சண்டையிட்டு வந்தவர், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரிந்துவிட்டார். மனைவி பிரிந்து சென்ற சோகம் மாரியப்பன் மனதில் ஆழமாக இருந்துள்ளது. அது மகேந்திரன் மீது கோபமாக உருமாறியுள்ளது. தன்னுடைய வாழ்க்கை சீரழிந்ததற்கு மகேந்திரன் தான் காரணம் என்று கூறினார். மாரியப்பனுக்கும் மகேந்திரனுக்கும் சொந்தமான கிணறு இருக்கிறது.
அதில் தண்ணீர் எடுப்பதை காரணமாக வைத்துக் கொண்டு அடிக்கடி அண்ணனிடம் சண்டையிட்டு வந்திருக்கிறார். அந்த சண்டை தான் கொலையில் முடிந்துள்ளது. மகேந்திரனை பார்க்க அரிவாளுடன் வயலுக்கு சென்ற மாரியப்பன், வாக்குவாதம் முற்றி, மொத்தமாக பழி தீர்க்க, வெட்டிக் கொலை செய்துள்ளார். இது தொடர்பாக மாரியப்பன் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications