அண்ணாமலை பாதயாத்திரைக்கு அதானி பணம்.. டெய்லி 1 கோடி ரூபாய்.. மாணிக்கம் தாகூர் பகீர் குற்றச்சாட்டு!
விருதுநகர்: பாதயாத்திரைக்காக அண்ணாமலை தினமும் அதானியின் பணம் ரூ.1 கோடி செலவு செய்து வருகிறார் என்றும் நடைபயணத்திற்கான கணக்கு வழக்கை அவர் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்றும் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், "நாங்குநேரியில் நடந்தது போன்ற சம்பவங்கள் மீண்டும் தமிழ்நாட்டில் நடக்காமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வெறுப்பு அரசியலின் மையமாக இருக்கக்கூடிய பல அமைப்புகள் இதுபோன்ற சம்பவங்களை பயன்படுத்தி குளிர்காய நினைக்கின்றன. வெறுப்புணர்வை வளர்க்கும் நோக்கில் மத மற்றும் சாதி அமைப்புகள் ஈடுபடுவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதை தடுக்கும் வகையில் அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. பிரிவினை அரசியல் தமிழக வளர்ச்சியில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும். மாணவர்கள் மத்தியில் சாதிய மற்றும் பிரிவினை உணர்வுகள் வராமல் தடுப்பது ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் மு க்கியமான பணி." என்றார்.
மேலும் பேசிய அவர், "தமிழ்நாடு ஆளுநர் தமிழக மக்களுக்கு எதிரான மனநிலையில் உள்ளார். ஒவ்வொரு நொடியும் தமிழ்நாட்டிற்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். தொடர்ந்து அவர் தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொரு மணி நேரமும், பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் பொங்கி எழுவதை ஒருங்கிணைக்கும். மோடி ஆதரவுடன் செயல்படும் ஆளுநரின் அநாகரீக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சிவகாசி பட்டாசு தொழிலை கடந்த 9 ஆண்டுகளாக சீர்குலைத்தது யார்? பாஜக அரசால் நிலைகுலைந்த பட்டாசு தொழில் சீர்குலைவிலிருந்து மீண்டு எழ முடியவில்லை. பட்டாசு தொழிலுக்கும், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கும், பாஜகவும், பிரதமர் மோடியும், அண்ணாமலையும், துரோகம் செய்துள்ளனர். இந்தியா கூட்டணி அரசு அமையும்போது பட்டாசு தொழில் பிரச்சனைகளிலிருந்து விடுபடும்." எனத் தெரிவித்தார்.
விளம்பரத்திற்காக நடைபயணம் மேற்கொண்டுள்ள அண்ணாமலை பேசும் பேச்சுக்கு முக்கியத்துவம் தர வேண்டியது இல்லை. அவரது கட்சியான பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஓரங்கட்டப்பட்ட கட்சியாகவே உள்ளது. பேண்ட் செட், டிரம்ஸ், மயிலாட்டம், ஒயிலாட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு யாத்திரை நடத்த முடியாது. மக்கள் ஆதரவு தேவை. அண்ணாமலை நடைபயணத்தில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்து. பாதுகாப்பிற்கான போலீசாரின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது.

மக்கள் ஆதரவின்றி நடத்தும் அண்ணாமலையின் யாத்திரை என்பது பொய்யாகத்தான் முடியும். அதானி பண உதவியுடன் தான் நாள்தோறும் ஒரு கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டு அண்ணாமலையின் பாதயாத்திரை நடக்கிறது. தினந்தோறும் செய்யப்பட்டு வரும் செலவு தொகைக்கு உண்டான கணக்கு வழக்குகளை அண்ணாமலை பொதுவெளியில் வெளியிட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை 28ஆம் தேதி 'என் மண் என் மக்கள்' யாத்திரையை அண்ணாமலை தொடங்கினார். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் முதற்கட்ட யாத்திரை மேற்கொண்டார். தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். ஜனவரி மாதம் வரை நடைபயணத்தை தொடரவுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications