தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசம்! அதிமுக எழுச்சியை திமுகவால் தாங்கமுடியவில்லை -மாஃபா பாண்டியராஜன்
விருதுநகர்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிக மோசமாக உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், அதிமுக மிகுந்த எழுச்சியோடு எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுவதை திமுகவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை எனவும் கூறியிருக்கிறார்.
விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: விடியா அரசிடம் இருந்து விரைவில் விடியல் பிறக்கும்.. பொள்ளாச்சி ஜெயராமன்
மாஃபா.பாண்டியராஜன்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் கலந்து கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக மிகுந்த எழுச்சியோடு ஈபிஎஸ் தலைமையில் செயல்படுவதை திமுகவால் தாங்க முடியவில்லை என்றார். ஆணையங்களின் அறிக்கையை ஆயுதங்களாக பயன்படுத்த திமுக முயற்சித்து வருவதாகவும் ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை சந்தேகத்தை எழுப்புவதாகவும் தெரிவித்தார்.
சட்டம் ஒழுங்கு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான அறிக்கையும் தவறாக உள்ளது எனக் கூறிய மாஃபா பாண்டியராஜன், எடப்பாடி பழனிசாமி தான் சுடச் சொன்னார் என்பது போன்ற தோற்றம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை எனத் தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மிகுந்த மோசமான நிலையில் இருப்பது முதல்வர் ஸ்டாலினின் மனசாட்சிக்கு தெரியும் எனக் கூறினார் மாஃபா பாண்டியராஜன்.
மாவட்டச் செயலாளர்கள்
சைலேந்திரபாபு போல ஒரு நல்ல போலீஸ் ஆபீஸர் இருந்தும் அவரது கரங்கள் கட்டப்பட்டிருப்பதாக விமர்சித்த அவர், திமுககாரர்கள் காவல் நிலைய விவகாரங்களில் தலையிடுகிறார்கள் என குற்றஞ்சாட்டினார். இன்று காவல்துறையின் முழு பொறுப்பும், அதிகாரமும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கரங்களுக்கு சென்று விட்டதாக மாஃபா வேதனைத் தெரிவித்தார்.
நானும் ஒருவன்
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சசிகலாவின் குடும்பம் அங்கு ஆக்கிரமித்து இருந்தது என்பதை யாராலும் மறக்க முடியாது என்றும் அதை எதிர்த்து போராடிய அப்போதைய அமைச்சர்களில் நானும் ஒருவன் எனவும் கூறினார்.