கூட்டணியில் இருந்துகொண்டே அரசுக்கு நெருடலை ஏற்படுத்துகிறோம்.. ஆனால் கேலி செய்கிறார்கள்: திருமாவளவன்
விருதுநகர்: ஆளும் கட்சி கூட்டணியில் இருந்துகொண்டே திமுக அரசுக்கு நெருடல் கொடுக்கும் எங்களை பாராட்டாமல் கேலி செய்கிறது பாஜக, ஆக, திமுக கூட்டணியை சிதறடிப்பது தான் பாஜகவின் நோக்கமாக உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று விடுலைச் சிறுத்தைகள் கட்சி கொடியேற்றினார் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலை ஆய்வாளர்கள்) சங்கம் சார்பில் நடைபெற்ற 5வது மாநில பிரதிநிதித்துவ பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "வரும் அக்டோபர் 2 ஆம் தேதி உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மகளிர் மாநாடு நடைபெறுகிறது. தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் ஒரே நேரத்தில் முக்கியமான இரு கோரிக்கைகளை வலியுறுத்துகிறோம். அரசமைப்புச் சட்டம் 47-ன் படி மது ஒழிப்பு ஆலோசனைக் குழு 1954ல் அமைக்கப்பட்டு, அந்த குழு ஏராளமான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
மத்திய அரசே மது ஒழிப்புக்கான தேசிய கொள்கையை வரையறுத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அந்த குழு பரிந்துரைத்துள்ளது. அதனால்தான் மத்திய அரசுக்கும் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். தமிழக அரசும் மதுவிலக்கை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தில் மதுவிலக்கு இருக்கிறதா? இந்த கேள்விக்கு பாஜகவினர் பதில் அளித்தார்களா? குஜராத்தில் மது விலக்கு நடைமுறையில் உள்ளது. அது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. காந்தியடிகளை மதிக்கும் வகையில் குஜராத்தில் மட்டும் அது நடைமுறையில் உள்ளது.
ஆனால், பாஜக ஆளும் எந்த மாநிலத்திலும் மதுவிலக்கு கொள்கை இல்லை. இதனால் கடுமையாக பாதிக்கப்படுவது, அவர்கள் பாஷையில் சொல்வதானால் இந்துக்கள்தான். இளம் தலைமுறையினர் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்துக்களின் பாதுகாவலர்கள் எனக் கூறிக் கொள்ளும் பாஜக, இந்து இளைஞர்களைப் பாதுகாக்க பாஜக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? மாநில அரசு மீது பழிபோட்டுவிட்டு மத்திய அரசு கண்டும் காணாமல் உள்ளது.
தமிழகத்தில் நாங்கள் ஆளும்கட்சி கூட்டணியில் இருக்கிறோம். ஆனாலும், அரசுக்கு நெருடலை ஏற்படுத்தும் பிரச்சனையை கையில் எடுத்துள்ளோம். இதை அவர்கள் பாராட்ட வேண்டும், ஆனால் அவர்கள் கேலி செய்கிறார்கள் என்றால் அவர்கள் நோக்கம் மக்கள் நலன் அல்ல. திமுக கூட்டணியை சிதறடிப்பதாகத்தான் உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை கடுமையாக எதிர்க்கிறோம். குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர அவர்கள் முயற்சிக்கிறார்கள். எதிர்கட்சிகளே இல்லாத தேசத்தையும் ஒரு கட்சி ஒரு ஆட்சி என்ற முடிவை நோக்கி நகர்த்த அவர்கள் திட்டமிடுகின்றனர். இதை விசிக கடுமையாக எதிர்க்கிறது" எனத் தெரிவித்துள்ளார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications