‘காங்கிரஸ் ஓட்டு மட்டும் தேவையா.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்குங்க’ - திமுகவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
விருதுநகர்: தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளது. பலம் வாய்ந்த கூட்டணி என்று கருதப்பட்ட திமுக கூட்டணியில் சமீபகாலமாக பிரச்சனைகள் வெடிக்க தொடங்கியுள்ளது. தவெகவுடன் கூட்டணி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று காங்கிரஸ் நிர்வாகிகள் பேச தொடங்கியுள்ளனர். ஐபிடிஸ் சர்வேயை மேற்கோள் காட்டி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் சொன்ன கருத்து திமுக கூட்டணியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணிக்கம் தாகூர் ஆர்எஸ்எஸ் குரலை எதிரொலிக்கிறார் என்று திமுக எம்பி அப்துல்லா கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள மாணிக்கம் தாகூர் ஜெயிக்கிறதுக்கு காங்கிரஸ் கட்சி ஓட்டு தேவைப்படுகிறது தானே, மரியாதை கொடுத்து மரியாதை வாங்க வேண்டும் என்று திமுகவுக்கு காட்டமாக பதில் அளித்துள்ளார்.
விருநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த மாணிக்கம் தாகூர், "நண்பர் அப்துல்லாவுக்கு ஆர்எஸ்எஸ் பற்றி முழுதாக தெரியவில்லை என நினைக்கிறேன். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை நெஞ்சுக்கு நேராக எதிர்த்து நிற்பவன் காங்கிரஸ்காரன். கோட்சே காலத்தில் இருந்து எதிர்த்து, அவர்களுடன் எந்த சமரசமும் செய்யாமல் சென்று கொண்டிருக்கிறோம். அதனால் யாரை பற்றி பேசுகிறோம் என பார்த்து பேசுங்கள்.

மரியாதை கொடுத்து மரியாதை
மரியாதை கொடுத்து மரியாதை வாங்குங்கள். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர், பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் கிரிஷ் ஜோடங்கர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு கொடுத்திருந்த பேட்டி அனைத்து ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது. 'காங்கிரஸ் கட்சியை பொறுத்துவரை நாங்கள் வாக்குறுதி கொடுப்போம். அதை நிறைவேற்ற அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்கிற காலம் வந்துவிட்டது' என சொல்லியிருந்தார்.
நாங்கள் கேட்போமா இல்லையா என்பது வேறு விவகாரம். ஆனால் காலம் வந்துவிட்டது என்பதை சொல்கிறோம். அந்த கருத்து கணிப்பு அதற்கான திசையை காட்டியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தேன். தமிழ்நாட்டில் மீண்டும் இந்தியா கூட்டணி ஆட்சி போட்டியிடுவதற்கான திசையை காட்டியுள்ளது என்பதை சொல்கிறோம். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு திசையை காட்டியுள்ளது,
திமுக தனித்து ஆட்சியமைக்க முடியாது
முக்கியமாக திமுக தனித்து ஆட்சியமைக்க முடியாது என்பதற்காக திசையை காட்டியிருக்கிறது. கூட்டணி கட்சிகள் இல்லாமல் தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாது என்பதற்கான திசையை அந்த கருத்து கணிப்பு காட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சி டெல்லியில் அதிகார பகிர்வு தர தயாராக உள்ளது. கேரளா, அசாம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களிலும் ஆட்சியில் பங்கு தர தயாராக உள்ளோம்.
தமிழ்நாட்டிலும் ஆட்சியிலும் பங்கு என்கிற சிந்தனை வந்துவிட்டது. பெண்களுக்கு இலவச பஸ் பேருந்து, படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிற வரை மாதம் ரூ.3,000, விவசாயிகளுக்கு நிதி, வீடு கட்ட நிதி, இலவச மின்சாரம் ஆகியவை காங்கிரஸ் கட்சிகளின் வாக்குறுதி. கர்நாடகா, தெலங்கானா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இந்த வாக்குறுதிகளை கொடுத்தோம். இதனால் கர்நாடகா, தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது.
காங்கிரஸ் ஓட்டு மட்டும் வேணுமா
ஜார்கண்ட் மாநில அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு 4 அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், தமிழ்நாடு பொறுப்பாளரும் சொன்ன கருத்தைத்தான் நானும் சொன்னேன். அதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகையும் ஆமோதித்தார். ஜெயிக்கிறதுக்கு காங்கிரஸ் கட்சி ஓட்டு தேவைப்படுகிறது தானே" என்று கூறியுள்ளார். அவரின் இந்த கருத்து திமுக கூட்டணியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications