சிவகாசியில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை..உடல் கருகி உயிரிழந்த 2 பேர்..இருவர் பலத்த காயம்
விருதுநகர்: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 2 பெண்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டியில் பிரவீன் ராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. நாக்பூரில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிபொருள் கட்டுப்பாட்டு துறையின் அனுமதி பெற்ற இந்த பட்டாசு ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இன்று காலையில் வழக்கம்போல் இந்த பட்டாசு ஆலையில் 120 பணியாளர்கள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தரை சக்கர பட்டாசுக்கான ரசாயன மூலப்பொருட்களை செலுத்தி கொண்டிருந்த இடத்தில் ரசாயன மூலப்பொருளில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடித்தது. இதில் ஒரு அறை இடிந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில், இடையங்குளத்தை சேர்ந்த தங்கவேல்,55, கருப்பசாமி,32 ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாரித்தாய், கருப்பம்மாள் ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக அளவில் தீ காயம் ஏற்பட்டுள்ளதால் கவலைக்கிடமான நிலையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடி விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. கோடை காலமாக இருப்பதால் விபத்துகள் அதிக அளவில் நிகழ வாய்ப்பு உள்ளது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பட்டாசு ஆலைகளில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications