சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு.. சிகிச்சை பெற்றவர்கள் உயிரிழந்த சோகம்!
விருதுநகர்: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள காளையார்குறிச்சியில் முருகவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த பட்டாசு ஆலையில் வரும் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வந்தன. சுமார் 60க்கும் மேற்பட்ட அறைகளில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காலையில் வழக்கம் போல், தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காலை 9.15 மணியளவில் மருந்து கலவை அறையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த அறை வெடித்து சிதறியது.
அங்கு வேலை பார்த்த சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன், முத்துவேல் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சரோஜா, சங்கரவேல் ஆகிய இரண்டு தொழிலாளர்கள் காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், விருதுநகரில் சிகிச்சை பெற்று வந்த சரோஜா என்ற நேற்று மாலை உயிரிழந்தார். மேலும் சங்கரவேல் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன்மூலம் சிவகாசி காளையார் குறிச்சி பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலிப், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் மற்றும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும், சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications