விருதுநகர் அருகே இரட்டை கொலை... தொடரும் பதற்றம்! உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை
விருதுநகர்: வச்சக்காரபட்டி அருகே தடங்கம் கிராமத்தில் ஆடு மேய்க்கும் இரண்டு நண்பர்கள் நள்ளிரவில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் வச்சக்காரபட்டி அருகே அமைந்துள்ளது தடங்கம் கிராமம். இப்பகுதியை சேர்ந்த சந்தனக்குமார்(22) மற்றும் அவரது நண்பர் மணிகண்டன்(19) ஆகியோர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்றிரவு சந்தனக்குமாரும் அவரது நண்பர் மணிகண்டனும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இரட்டை கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளியைத் தேடி வருகின்றனர். சந்தனக்குமாரின் தந்தையுடைய சகோதரர் மகனான மற்றொரு மணிகண்டன்(26) என்பவருக்கும் சந்தனகுமாருக்கும் ஆடு மேய்க்கும் தொழிலில் முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு சந்தனகுமார் நண்பருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்கு வந்த உறவினர் மணிகண்டன் சந்தனகுமாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், பின்னர் வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்ததாக போலீசார் கூறுகின்றனர்.
திடீரென கையிலிருந்த அரிவாளால் சந்தனகுமார் மற்றும் அவரது நண்பர் மணிகண்டன் ஆகியோரை வெட்டியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் கொலை செய்த மணிகண்டன் தப்பி ஓடிவிட்டதாகவும், அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications