ஒரு வாரம் தான்.. டிடிவி தினகரனின் கார் டிரைவர் கூட விலகிவிடுவார்.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு
விருதுநகர்: டிடிவி தினகரனின் கார் டிரைவர் கூட, ஒரு வாரத்தில் தங்கள் பக்கம் வந்து விடுவார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
சிவகாசியில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு வழங்கப்பட்ட தண்டனை தனிப்பட்ட முறையில் வருத்தம் அளிக்கிறது. அவர் மிகச்சிறந்த தமிழ் போராளி. தமிழ் உணர்வுகளையே பிரதிபலித்தார் என்றார்.
திமுக செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பத்து ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தவர்களுக்கு பதவி வழங்காமல் , ஏ.சி காரில் பிரசாரம் செய்தவருக்கு பதவி என்பது ஸ்டாலின் குடும்ப பாசத்தில் மூழ்கி உள்ளதை காட்டுகிறது என்றும் கூறினார்.
மேலும், டிடிவி தினகரன் தனிமையில் பயந்து போய் உள்ளார். அவரது கார் டிரைவர் கூட ஒரு வாரத்தில் வந்து விடுவார். குடும்ப கட்டுபாட்டில் கட்சியை வழிநடத்த முயன்றார். நடக்கவில்லை. இதனால் மத்திய, மாநில அரசுகளை குறை சொல்கிறார். அவர் பின்னால் யானை,சிங்கம்' புலி துரத்துகிறது. இது தெரியாமல் பேசி வருகிறார். வார்த்தையை உணர்ந்து பேச வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்களைப் பாதிக்கின்ற எந்தத் திட்டத்தையும் இந்த அரசு எதிர்க்கும். அந்த திட்டத்தை முறியடிப்போம். மக்கள் நலன் சார்ந்த திட்டத்தினை மட்டுமே ஆதரிப்போம் என்றும், அம்மாவின் பிள்ளைகள் சொன்னால் சொன்னது தான். வார்த்தை மாற மாட்டார்கள். பாமகவுக்கு எம்.பி சீட் உண்டு என்றும் தெரிவித்தார். திமுக பொய்யான வாக்குறுதிகளை சொல்லி வெற்றி பெற்றுள்ளது. பிஜேபியுடன் கூட்டணி என்பதால் தோல்வி இல்லை எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.