நான் மத்திய அரசு அதிகாரி.. விருதுநகர் தங்கும் விடுதியில் வாயை விட்டு வசமாக மாட்டிக்கொண்ட கோவை ராமு
விருதுநகர்: விருதுநகர் புல்லலக்கோட்டை ரோடு பகுதியை சேர்ந்த அனிஸ்கனி என்பவர் ஒரு தங்கும் விடுதியில் வேலை பார்த்து வருகிறார். அந்த விடுதிக்கு கோவை மாவட்டம் சின்னதடாகத்தை சேர்ந்த ராமு என்பவர் சுங்கத்துறை அதிகாரி என கூறி ஒரு அடையாள அட்டையையும் காட்டி, அறை எடுத்து தங்கி உள்ளார். ஒரு வாரம் தங்கியவரிடம் வாடகை கேட்ட போது, என்னிடமே வாடகை கேட்கிறாயா என்று மிரட்டி உள்ளார். அவரை விசாரித்த போது தான் உண்மை அம்பலமாகி உள்ளது.
ஓட்டலில் தங்கிவிட்டு அரசு அதிகாரி, ஐஏஎஸ் அதிகாரி, ஐபிஎஸ் அதிகாரி, வருமான வரித்துறை என்று கூறி, வாடகை தராமல் ஏமாற்றும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்படும் சிலர், போலி அடையாள அட்டை ஒன்றை உருவாக்கி, இந்த ஊர் ஐஏஎஸ், இந்த ஊர் எஸ்பி, இன்கம் டேக்ஸ் அதிகாரி, சிபிஐ அதிகாரி என்று ஏமாற்றுகிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல டெல்லியில் கூட இப்படி சம்பவங்கள் நடந்துள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தின் அதிகாரி என்று கூறி, புதுடில்லியில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நான்கு மாதங்கள் தங்கியிருந்து, பல லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை தராமல் ஏமாற்றி சென்றுள்ளார். இந்த சம்பவம் 2023 ஜனவரியில் நடந்தது.
மதுரை, சென்னை, தூத்துக்குடி உள்பட பல்வேறு பகுதிகளில் அரசு அதிகாரி என்று கூறி ஏமாற்றிய சம்பவங்கள் நடந்துள்ளது. தங்களுக்கு வேண்டிய காரியத்தை அரசு அலுவலகங்களில் செய்து கொள்வதற்காகவும் அரசு அதிகாரி என்று மோசடி செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
விருதுநகர் புல்லலக்கோட்டை ரோடு பகுதியை சேர்ந்த 29 வயதாகும் அனிஸ்கனி , விருதுநகரில் உள்ள ராமமூர்த்தி ரோட்டில் தங்கும் விடுதி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அந்த தங்கும் விடுதிக்கு கோவை மாவட்டம் சின்னதடாகத்தை சேர்ந்த ராமு (42) என்பவர் வந்துள்ளார். தன்னை சுங்கத்துறை அதிகாரி என கூறி ஒரு அடையாள அட்டையையும் காட்டி, அறை எடுத்து தங்கியிருக்கிறார்.
ஒரு வாரமாக தங்கிய ராமு, அறை வாடகை தரவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் அனிஸ்கனி, ராமுவிடம் வாடகையை கேட்டுள்ளார். அப்போது ராமு, தான் ஒரு சுங்க அதிகாரி என்றும், என்னிடமே வாடகை கேட்கிறாயா? என வாக்குவாதம் செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஓட்டல் ஊழியர்கள் அனிஸ்கனி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ராமு சுங்கத்துறையில் வேலை பார்க்கவில்லை என்றும் அவர் வைத்திருந்தது போலி அடையாள அட்டை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலி சுங்கி அதிகாரி ராமுவை பல்வேறு பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications