காப்பாத்துங்க.. திடீரென வந்த காட்டாற்று வெள்ளம்.. ஸ்ரீவில்லிபுத்தூரில் நீரோடையில் சிக்கிய 150 பேர்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் ராக்காட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற 40 பெண்கள் உள்பட 150 பேர் காட்டாற்று வெள்ளத்தால் நீரோடையின் மறுபுறத்தில் சிக்கினர். கொட்டும் மழையில் தவித்த 150 பேரையும் 3 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே நீரோடை செல்கிறது. நேற்று தீபாவளி பண்டிகையை முடித்த பலரும் இன்று கோவிலுக்கு சென்றனர்.

மேலும் நீரோடைகளில் மக்கள் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தனர். வெளியூர்களில் இருந்து தீபாவளி கொண்டாட வந்த பலரும் இந்த நீரோடையில் குளித்து கொண்டிருந்தனர்.
குறிப்பாக ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சத்திரப்பட்டி, சிவகாசி மற்றும் அதனை சுற்றிய இடங்களில் இருந்து ஏராளமானவர்கள் நீரோடையில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது மாலை நேரத்தில் திடீரென்று கனமழை பெய்தது. இந்த மழையின் காரணமாக நீரோடையில் திடீரென்று தண்ணீர் அதிகரித்தது. இதனால் நீரோடையில் குளித்த மக்களில் ஒரு பகுதியினர் உயிருக்கு பயந்து நீரோடையின் மறுபுறம் சிக்கி கொண்டனர்.

40 பெண்கள் உள்பட மொத்தம் 150 பேர் நீரோடையின் மறுபக்கம் சிக்கி கொண்டனர். மழை தொடர்ந்து பெய்த நிலையில் நீரோடையில் தண்ணீர் என்பது குறையவில்லை. இதனால் அவர்கள் மழையின் நனைந்தபடியே நீரோடையின் மறுபுறம் நின்றனர். இதுபற்றி உடனடியாக போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அதன்படி தீயணைப்பு வீரர்கள் நீரோடையின் இருபுறமும் கயிறு கட்டி ஒவ்வொருவராக மீட்டனர். மொத்தம் 3 மணிநேர போராட்டத்துக்கு பிறகு 150 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதன்பிறகு அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications