அதிமுக நிர்வாகி கன்னத்தில் அறை விட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.. பொதுக்கூட்டத்தில் பரபரப்பு
விருதுநகர்: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கட்சி நிர்வாகி ஒருவருக்கு 'பளார்' என அறை விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக சார்பில் விருதுநகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி கட்சியினர் சார்பாக வெள்ளி வாள் ஒன்று பரிசாக அளிக்கப்பட்டது.

இந்தப் பொதுக்கூட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை அணிவிக்க மேடைக்கு முண்டியடித்தனர். அப்போது கோபமாகி நிர்வாகி ஒருவரை ஆவேசமாக அறைந்தார் ராஜேந்திர பாலாஜி.
பொன்னாடை போர்த்த நிர்வாகிகள் பலரும் வரிசையில் நின்றபோது, வரிசையில் வராமல் முண்டியடித்துக் கொண்டு வந்ததால் ஆத்திரமடைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமாரை எழுந்து நின்று 'பளார்' என கன்னத்தில் அறைந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தகுமார், ராஜேந்திர பாலாஜியிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் கோபமாக அங்கிருந்து புறப்பட்டார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
நேற்று ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்ட அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், அதிமுக நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பியதால் செங்கோட்டையன் ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார்.
அதிமுக கூட்டத்தில் கைகலப்பு நிகழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதேபோல விருதுநகரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பங்கேற்ற கூட்டத்தில் கட்சி நிர்வாகி ஒருவரை ராஜேந்திர பாலாஜி ஓங்கி அறைந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications