விருதுநகரை வியப்பூட்டிய மொய் விருந்து.. சாத்தூர் MLA நேராவே வந்துட்டாரு.. இலைகளுக்கு அடியில் "மனிதம்
விருதுநகர்: விருதுநகரில் நடந்த மொய் விருந்து ஒன்று, பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறது.. இந்த மொய் விருந்தை நடத்தியிருப்பது யார் தெரியுமா?
கடந்த மாதம் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, ஒட்டுமொத்த மாநிலத்தையே நிலைகுலைய வைத்துவிட்டது.. இந்த பேரிடரில் நூற்றுக்கணக்கானோர் மண்ணோடு மண்ணாக உயிரிழந்துள்ளனர்.. என்ன நடக்கிறது என்பது தெரிவதற்குள்ளாகவே, நூற்றுக்கணக்கானோர் பரலோகம் போய்விட்டனர்..

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் தங்கள் உறவுகள், உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் கண்ணீர் விட்டு கதறி கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரமே இன்று கேள்விக்குறியாகியிருக்கிறது..
மிகப்பெரிய ஆபத்திலிருந்து இவர்கள் உயிர்பிழைத்திருக்கிறார்கள்.. எனவே, இவர்களின் வாழ்வாதாரத்தை காக்க, பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.. இளகிய மனம் படைத்தவர்கள், நாட்டின் நாலாபுறமிருந்தும் உதவிகளை வயநாட்டில் செய்து கொண்டிருக்கிறார்கள்.
உதவிகள்: நமக்கு பக்கத்து மாநிலம் என்பதால், கேரளாவை நினைத்து தமிழக மக்களும் பெருத்த கவலையில் உள்ளனர். தமிழகத்தின் உதவிகள் கேரளாவில் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றன.. மூலை முடுக்கிலிருந்தெல்லாம் நிவாரண பொருட்கள் கேரளாவுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.. அரசியல் பிரமுகர்கள் முதல் தனிநபர்கள் வரை வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள். இதில் ஒரு பகுதியாக மொய் விருந்துகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
கடந்த வாரம்கூட திண்டுக்கல் ஹோட்டல் சங்கத்தினர் மொய் விருந்தை நடத்தினார்கள்... இந்த மொய் விருந்து என்பது, நாம் சாப்பிடும் சாப்பாட்டுக்கு பில் எதுவும் வழங்கப்படாது.. மாறாக தாங்கள் விரும்பிய தொகையை அவர்கள் வழங்கலாம். யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. அந்தவகையில், விருதுநகர் மாவட்டத்திலும் மொய்விருந்து நடத்தப்பட்டுள்ளது..
மொய் விருந்து: சாத்தூரில் உள்ள அனைத்து வணிக சங்கங்கள் சார்பாக தனியார் திருமண மண்டபத்தில், மொய் விருந்து நடந்துள்ளது.. மொய் விருந்து நடத்தப்படுகிறது என்ற தகவல் பரவியதுமே, ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்துவிட்டார்களாம்.. அதுபோலவே இந்த மொய் விருந்தில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ரகுராமனும் கலந்து கொண்டுடார். விருந்தில் பொது மக்களுக்கு சைவம் மற்றும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன..
மொய் விருந்தில் பலரும் சாப்பிட்டுவிட்டு, சாப்பாட்டுக்கு உண்டான தொகையை விட, அதிக தொகையை இலைக்கு அடியில் வைத்துவிட்டு சென்றார்கள். பெரும்பாலானோர் இலையின் கீழ் ரூ.500 முதல் ரூ.2500 வரை மொய் வைத்தனர். தங்களிடம் குறைவான பணத்தை வைத்திருந்தவர்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த உண்டியலில் செலுத்திவிட்டு போனார்கள்..
நெகிழ்ச்சி: மொய் விருத்தில் குழந்தைகளும் கலந்து கொண்டார்கள்.. இவர்கள் வரும்போதே தங்களது கையில், உண்டியலை கொண்டுவந்திருந்தார்கள்.. வயநாடு மக்களுக்காக தங்கள் உண்டியல் காசை தருகிறோம் என்று சொல்லி தந்துவிட்டு போனார்கள்.
இந்த மொய் விருந்து மூலம் கிடைக்கும் பணத்தை வயநாடு நிலைச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications